முன்னாள் அமைச்சர் மீது பொங்கியெழுந்த அ.ம.மு.க.வினர்.. உருவபொம்மை எரித்து ஆவேசம்.. பரபரப்பு!
புதுக்கோட்டை: சசிகலாவை அவதூறாக பேசியதாக கூறி முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மையை எரித்து அமமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னரே அ.தி.மு.க.வில் பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்து விட்டன.
பெங்களுரு சிறையில் இருந்து விடுதலையான உடனேயே சசிகலா அதிரடியை காட்ட ஆரம்பித்தார். அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் வந்து பரபரப்பை உண்டாக்கினார்.
உபி-இல் குடியரசு தலைவர் பயணம்.. டிராஃபிக்கில் நிறுத்தப்பட்ட பெண் நோயாளி பலி.. மன்னிப்பு கேட்ட போலீஸ்
சசிகலா காட்டிய அதிரடி
இதனால் பல்வேறு திருப்பங்கள் ஏற்படும் என்று கூறப்பட்ட நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அதிரடியாக அறிவித்தார் சசிகலா. இதன்பின்னர் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்து அதிமுக ஆட்சியை பறிகொடுத்தது. இதுவரை அமைதியாக இருந்த சசிகலா மீண்டும் அதிரடி காட்ட ஆரம்பித்தார். அதிமுக நிர்வாகிகளுடன் அவர் பேசும் வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகி பரபரப்பை உண்டாக்கின.
நத்தம் விஸ்வநாதன் விமர்சனம்
சசிகலா மீண்டும் கட்சியை கைப்பற்ற விரும்புகிறார் என்று பேசப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் தலைவலி உண்டானது. இதனை தொடர்ந்து சசிகலாவுடன் போனில் பேசியவர்களை அதிரடியாக நீக்க தொடங்கியது அதிமுக. சசிகலாவுக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் குரல்கொடுக்க தொடங்கினார்கள். இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கடும் விசர்சனத்தை சசிகலா மீது வைத்த்த்தார்.
கொதித்து போன அமமுக
''சசிகலா எந்த நிலையிலும் அதிமுகவில் வர முடியாது. அவர் தாய் இல்லை. பேய்'' என்று மிக கடுமையாக விளாசி தள்ளினார் நத்தம் விஸ்வநாதன். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அதிமுக நிர்வாகிகளிடம் வழக்கம்போல் பேசிக் கொண்டிருக்கிறார் சசிகலா. ஆனால் நத்தம் விஸ்வநாதனின் பேச்சை கண்டு அமமுகவினர் கொதித்து போய் உள்ளனர்.
உருவ பொம்மை எரிப்பு
சசிகலாவை அவதூறாக பேசி வருபவர்களை கண்டித்து அ.ம.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அ.ம.மு.வினர் பொன்னமராவதி புதிய பேருந்து நிலையம் அருகே நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.