“அயோத்தி என்ன கெட்ட வார்த்தையா? திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறினால் என்ன தவறு?” - ஹெச்.ராஜா
புதுக்கோட்டை: திருப்பரங்குன்றம் மலை மீது, தர்கா அருகில் இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்று பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், "திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறினால் என்ன தவறு" என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை சொத்துக்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அதிலிருந்து வருமானத்தை சரியாக கணக்கில் வைத்திருக்க வேண்டும். ஆனால், திமுக அதை செய்யவில்லை.

கருணாநிதி உயிரிழந்தபோது அவரது உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய வேண்டும் என திமுக நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றமும் அனுமதி கொடுத்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி பெருந்தன்மையுடன் உத்தரவை செயல்படுத்தினார். அதே பெருந்தன்மையுடன் உத்தரவை செயல்படுத்தினால் என்ன?
தற்போது நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தி இருக்க வேண்டும். திருப்பரங்குன்றம் வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பதற்கு எதிராக அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், நீதிமன்றம் அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டது. ஆகையால் இன்றைக்கு அமலில் இருப்பது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுதான். இந்த விவகாரத்தில் இதுவரை இஸ்லாமியர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தை வைத்து வாக்கு அரசியல் நடத்துவதற்கு திமுகதான். இந்து விரோத தீய சக்திகள் இந்து கோயில்களை மிஸ் யூஸ் செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நடந்து வரும் திமுகவின் இன்று விரோத ஆட்சி, எப்படி லாலு பிரசாத் குடும்ப ஆட்சி தூக்கி எறியப்பட்டதோ அதுபோல எதிர்வரும் தேர்தலில் இந்த ஆட்சியில் தூக்கி எறியப்படும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகதான் இந்து விரத சக்தியாக செயல்பட்டு வருகிறது. நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் இவர்களுக்கு என்ன சிக்கல்? திருச்செந்தூரில் ரூ.300 கோடி அளவுக்கு திருப்பணி நடந்துள்ளது. ஆனால், அது முறைகேடாக நடந்துள்ளது. அதேபோல முருகன் மாநாடு நடத்திய பழனியில் இதுவரை வரவு செலவு கணக்கு காட்டப்படவில்லை. அப்படியெனில் அறநிலையத்துறை அமைச்சரை திருடன் என்று சொல்லலாமா?
திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறினால் என்ன தவறு? அயோத்தி என்ன கெட்ட வார்த்தையா..?அயோத்தி இந்துக்களின் புனிதமான இடம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிற திக, திமுக, விசிகதான் இந்து விரோதி" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications