புதுக்கோட்டை துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்த சிறுவன் புகழேந்தியின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகேயுள்ள கொத்தமங்களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன், கூலித் தொழிலாளி. இவரது மகன் புகழேந்தி (11). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டதால் நார்த்தாமலையில் உள்ள தனது தாத்தா முத்துவின் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அங்கிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் பசுமலைப்பட்டியில் இருக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் சிஐஎஸ்எஃப் போலீஸார் பயிற்சி பெற்றிருந்தனர்.

அப்போது 2 தோட்டாக்கள் வெளியேறி முத்துவின் வீட்டு சுவற்றில் பாய்ந்தது. இன்னொன்று வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனின் தலையில் பாய்ந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கிய சிறுவனை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கடந்த டிசம்பர் 31ஆம் தேதி 4 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தலையிலிருந்த தோட்டாக்கள் அகற்றப்பட்டன. எனினும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவனின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு அவரது பெற்றோரும் உறவினர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் இறந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் புதுக்கோட்டையில் நார்த்தாமலையில் சிறுவன் புகழேந்தியின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் கேட்டு துயரமடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். சிறுவன் இறந்த சம்பவத்தில் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் முடிவில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications