அமைச்சர் மெய்யநாதன் மீது எனக்கு டவுட் இருந்தது! மனதில் தோன்றியதை மறைக்காமல் பேசிய முதல்வர் ஸ்டாலின்!
புதுக்கோட்டை: அமைச்சர் மெய்யநாதன் அமைச்சரவைக்கு புதியவர் என்பதால் எப்படிச் செயல்படுவாரோ என ஆரம்பத்தில் தனக்கு தயக்கம் இருந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆனால் இப்போது ஒரு தேர்ந்த அமைச்சராக-இரண்டாவது முறை அமைச்சராக இருப்பவர்களை போல் அழகாக பேசி தனது துறையில் ஆளுமை செலுத்தி வருகிறார் என முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
புதுக்கோட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைக் கூறினார். அதன் விவரம் வருமாறு;
விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றமே அரசின் பெரும் சாதனை! புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
அமைச்சர் மெய்யநாதன்
''மெய்யநாதன் அமைச்சரவைக்குப் புதியவராக இருந்ததாலும், அவர் எப்படிச் செயல்படுவார் என்கிற தயக்கம் எனக்கு முதலில் இருந்தது. ஆனால் முதல் முறை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தபோதும், இப்போது ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததற்குப் பிறகு தனது துறைக்கான மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிகிறபோது, ஒரு தேர்ந்த அமைச்சராக-இரண்டாவது முறையாக அமைச்சராக அவர் பொறுப்பேற்றிருக்கிறார் என்ற அளவிற்கு அவர் அழகாகப் பேசினார். ''
கொஞ்சம் டெக்னிக்கல்
''சுற்றுச்சூழல் துறை என்பது கொஞ்சம் டெக்னிக்கலான துறை! இன்றைய உலகில் மிக முக்கியமான துறையும் கூட! அதிலும் தனிப்பட்ட ஆர்வத்தைச் செலுத்தி அந்தத் துறையில் சிறப்பாக ஆளுமையை அவர் செலுத்தி வருகிறார். அதுமட்டுமல்ல, விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளைப் படைக்க, அவரது உற்சாகம் காரணமாக அமைந்திருக்கிறது.''
அமைச்சர் ரகுபதி
''அமைச்சர் ரகுபதி அவர்களைப் பற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை! அரசின் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றுவதிலும், தமிழக அரசின் வழக்குகளைத் திறம்பட கையாண்டு மாநில உரிமைகளை நிலைநாட்டுவதிலும் ரகுபதி அவர்களின் பங்கு இன்றியமையாத பங்காக அமைந்திருக்கிறது.''
ஊர் பெருமை
''ஒரு காலத்தில் திருச்சி மாவட்டத்தோடு இருந்தது இந்த புதுக்கோட்டை. 1974-ஆம் ஆண்டு அதனை பிரித்து, புதுக்கோட்டையை தனி மாவட்டமாக ஆக்கியவர் நம்முடைய கலைஞர். எந்தக் கோட்டையாக இருந்தாலும் அது ஒரு நாள் பழைய கோட்டையாக ஆகிவிடும். ஆனால் எப்போதும் புதிய- கோட்டையாகவே இருப்பது, இந்த புதுக்கோட்டை. '' இவ்வாறு முதல்வர் தனது உரையில் குறிப்பிட்டார்.