குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்படவில்லை.. பரிசோதனையில் “ட்விஸ்ட்”.. மாவட்ட நிர்வாகம் தகவல்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்ததாக புகார் எழுந்த நிலையில், குடிநீர் மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. ஆய்வில், குடிநீரில் நோய்க்கிருமி தொற்று இல்லை என தெரிய வந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள சங்கம் விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவாண்டான்தெருவில் 30-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களும் 200-க்கும் மேற்பட்ட மாற்று சமூகத்தினரும் வசித்து வருகின்றனர். அந்த மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அங்கு இருக்கிறது.

இந்நிலையில் அந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் இருந்து வரும் குடிநீரை குடித்த பட்டியலின மக்கள் சிலருக்கு வயிற்று வலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை ஆராய்ந்த போது அதில் மாட்டுச் சாணம் இருந்ததாக கூறப்பட்டது.
வேங்கைவயல் சம்பவம் போல, இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நீர் தேக்கத் தொட்டியில் உள்ள தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பவும், தொட்டியை சுத்தம் செய்யவும் உத்தரவிட்டார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சங்கம் விடுதி குடிநீர் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரி திருச்சியில் உள்ள மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் சங்கம்விடுதி குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதற்கான அறிகுறி இல்லை என்றும் தொட்டியில் உள்ள நீர் குடிப்பதற்கு உகந்ததுதான் என்றும் தெரியவந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
குடிநீர் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டு மாசுபட்டிருந்தால் அந்த நீரில் ஈகோலை பாக்டீரியா உருவாகி இருக்கும். ஆனால், அவ்வாறு பாக்டீரியா எதுவும் இல்லை என்றும் நீர் பகுப்பாய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொட்டியை நீண்டகாலமாக சுத்தம் செய்யாமல் இருந்ததால் பாசி படிந்திருக்கிறது என்றும் அதைப் பார்த்த சிலர் மாட்டுச்சாணம் கலந்திருப்பதாகத் தவறாகக் கருதி இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. அந்தச் சம்பவம் நடத்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என விமர்சிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் தான் சங்கம்விடுதியில் குடிநீரில் மாட்டுச்சாணம் கலந்ததாக வந்த புகார் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், அதில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications