திமுக மாவட்டச் செயலாளர் பணம் கேட்கிறார்... ஸ்டாலினிடம் முன்னாள் எம்.எல்.ஏ.புகார்
புதுக்கோட்டை: திமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் ரகுபதி மீது தலைமையிடம் புகார் அளித்துள்ளார் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆலவயல் சுப்பையா.
உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு விருப்பமனு அளித்த தனது மகன் முரளியிடம் ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் தான் சீட் தரமுடியும் என ரகுபதி தெரிவித்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதனால் இந்த விவகாரம் தொடர்பான பஞ்சாயத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மந்தநிலை
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் படு சுறுசுறுப்பாக அதிமுக இயங்கி வரும் நிலையில், திமுகவில் இன்னும் இட ஒதுக்கீடே முடியவில்லை. மேலும், வேட்பாளர்கள் தேர்விலும் மந்த நிலையே நீடிக்கிறது. இதனால் மாவட்டச் செயலாளர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளார் ஸ்டாலின்.

தலைமைக்கு புகார்
இந்நிலையில் புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் ரகுபதி, பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே மாவட்டத்தில் சீட் வழங்குவதாகவும், மக்களிடம் பரிச்சயம் பெறாத நபர் பணம் கொடுத்தால் உடனே அவருக்கு சீட் கொடுப்பதாகவும் முன்னாள் எம்.எல்.ஏ. ஆலவயல் சுப்பையா புகார் கூறியுள்ளார். மேலும், தனது மகன் மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிட விருப்பமனு அளித்திருந்த நிலையில், ரகுபதி ரூ.10 லட்சம் தர வேண்டும் எனக் கேட்டதாக கூறியுள்ளார்.

பஞ்சாயத்து
பொன்னமராவதியை சேர்ந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ.ஆலவயல் சுப்பையா அளித்த புகார் கடிதம் தொடர்பாக அண்ணா அறிவாயலத்தில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டு தரப்பினரும் தங்கள் விளக்கத்தை அளித்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை யார் மீதும் நடவடிக்கை கூடாது என்பதில் உறுதியாக உள்ள தலைமை அதனை அப்படியே கிடப்பில் வைத்துள்ளது.

பொய் குற்றச்சாட்டு
ரகுபதிக்கு இருக்கும் வசதிக்கும், பணத்துக்கும் அவர் ஏன் சுப்பையாவிடம் போய் 10 லட்ச ரூபாய் கேட்கப்போகிறார், தலைமையிடம் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார்கள் ரகுபதி தரப்பினர். இதனிடையே, மாவட்டச் செயலாளர் பணம் கேட்டது உண்மை என்கின்றனர் சுப்பையா தரப்பினர். இதில் எது உண்மை என்பது உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications