எடப்பாடி பழனிசாமிக்கு பயம் வந்துருச்சு.. மதுரை மாநாட்டுக்கு கூட்டம் சேரல.. அமைச்சர் ரகுபதி விளாசல்!
புதுக்கோட்டை: மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு கூட்டம் சேர்க்க முடியாது என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு வந்துவிட்டது என்றும் அதனால் தான் அவர் திமுக மீது பழி போடுகிறார் என்றும் அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் பொன்விழா மாநாடு நடைபெறுகிறது. அதே நாளில், நீட் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளது திமுக. இந்நிலையில், "இந்தியாவே வியக்கும் வகையில் அதிமுக மாநாடு இருக்கும். 15 லட்சம் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள். இதைப் பார்த்து பயந்து, நடுங்கித்தான் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை மையமாக வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதற்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் திமுகவின் ஒரே நிலைப்பாடு. இதை புரியாதவர்கள் இரட்டை நிலைப்பாடு என்று சொன்னால் அவர்கள் தான் இதற்கு விளக்கம் தர வேண்டுமே, தவிர நாங்கள் விளக்கம் தர வேண்டிய அவசியம் இல்லை. எங்களுடைய நிலைப்பாடு நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான்.
கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. அதை மாநில அரசுக்கு மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தனது சுதந்திர தின விழா உரையில் தெளிவாகத் தெரிவித்துள்ளார். கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வந்து நிச்சயமாக நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இரட்டை வேடமோ இரட்டை நிலைப்பாடோ நாங்கள் எடுக்கவில்லை.

மதுரை அதிமுக மாநாட்டிற்கு கூட்டம் வராது என்று எடப்பாடி பழனிசாமிக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் அவர் திமுக மீது பழி போடுகிறார். அதிமுகவினர் அனைத்து ஊர்களிலும் சென்று வாருங்கள், திருப்பரங்குன்றம் கோயிலுக்கும் மீனாட்சி அம்மனை பார்ப்பதற்கும் அழகர் மலைக்கும் போகலாம் என்று கூப்பிடுகின்றனர். அதற்கே ஆட்கள் செல்ல மறுக்கிறார்கள்.
அதனால் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு பயம் வந்துவிட்டது. அதற்கு நாங்கள் என்ன செய்வது? நாங்கள் எங்களது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை வருகின்ற 20ஆம் தேதி நடத்துகிறோம். திமுகவினர் யாரும் அதிமுக மாநாட்டுக்கு போகப்போவது கிடையாது, பொதுமக்கள் யாரையாவது அதிமுக கூட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும், ஆனால் பொதுமக்களும் அங்கு போகத் தயாராக இல்லை. எடப்பாடி பழனிசாமி பேசுவதைப் பார்த்தால், தொண்டர்களும் அவர்களது கட்சியில் இல்லை என்பதை தான் காட்டுகிறது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications