செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நம்பவே முடியாத வட்டி.. லட்சக்கணக்கில் செம்ம லாபம்.. இன்று ஸ்பெஷல் மேளா
புதுக்கோட்டை: செல்வ மகள் சேமிப்பு திட்டத்திற்கு 80 C சட்டத்தின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு என்றும், மாதம் மாதம் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை, பெற்றோர்கள் தங்களிடம் எப்போது பணம் இருக்கிறதோ அப்போது டெபாசிட் செய்யலாம் என்றும் புதுக்கோட்டை மாவட்ட அஞ்சல் அதிகாரி ராதை விளக்கம் அளித்துள்ளார்.
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை சேர்ப்பதற்கான சிறப்பு மேளாவை, 21, 28, மார்ச் 10 ஆகிய மூன்று நாட்கள் நடத்தப்படும் என, அஞ்சல்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது..

இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் கூறும்போது, அஞ்சல் துறை சார்பில், பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை, 2015ல் மத்திய அரசு அறிமுகம் செய்தது.
பெண் குழந்தைகளுக்கான திட்டம்
இந்த திட்டத்தின் கீழ், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக, பெற்றோர், பாதுகாவலர் கணக்கு துவங்கலாம். குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல், 1.5 லட்சம் ரூபாய் வரை செலுத்தலாம். இதற்கு, 8.2 சதவீத வட்டி கிடைக்கும்.
கணக்கு துவங்கி, 21 வருடங்கள் முடிவில், முதிர்ச்சி தொகையை பெற்றுக்கொள்ளலாம்.. அதற்கு முன்பு, மகளின் உயர்கல்விக்காக, 10ம் வகுப்பு முடித்து அல்லது 18 வயது கடந்தால், 50 சதவீத தொகையை எடுக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம், வேலுார், திருவண்ணாமலை, புதுச்சேரியை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் இதுவரை, 10 லட்சம் கணக்குகள் கடந்து, 8,351 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
மாத மாதம் பணம் செலுத்த தேவையில்லை
இத்திட்டத்தில் கணக்கு துவங்குவதற்கான சிறப்பு மேளா வரும், 21, 28 மற்றும் மார்ச், 10ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த நாட்களில், முக்கிய அலுவலகங்களில், சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படி இன்று சிறப்பு மேளா நடைபெற உள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட அஞ்சல் அதிகாரி ராதை செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து கூறும்போது, "செல்வமகள் சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு சிறப்பான திட்டம் ஆகும். மாதம் மாதம் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. பெற்றோர்கள் தங்களிடம் எப்போது பணம் இருக்கிறதோ அப்போது டெபாசிட் செய்யலாம்.
வரிவிலக்கு உண்டு
இந்த சேமிப்பு திட்டத்திற்கு 80 C சட்டத்தின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு. அதாவது பிறந்த உடனே முதல் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பிறந்த பிறப்பு சான்றிதழ் பெற்றவுடன் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அவர்களுடைய ஆதார் அட்டை எண், பான் கார்டு, 2 ஃபோட்டோ வைத்து பெண் குழந்தைகளுக்கு இந்த கணக்கை துவங்கிட முடியும்.
இந்த திட்டத்தில் கணக்கினை துவங்குவதற்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் மற்றும் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கணக்கினைத் துவங்க முடியும். இந்த செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் சேமிப்பது லாபமா என்று சந்தேகம் பலருக்கும் உண்டு.
ஆனால் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேமிப்பது என்பது நிச்சயமாக ஒரு பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவும், லாபமானதாகவும் இருக்கும்" என்று அஞ்சல் துறை அதிகாரி ராதை உறுதி கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications