பாயிண்டை பிடித்த கார்த்தி சிதம்பரம்.. விஜய்க்கு சரமாரி கேள்வி.. 'பட்டால் தான் தெரியும்' என பஞ்ச்
புதுக்கோட்டை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று அந்தக் கட்சியின் கொடி வெளியீடு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சிவகங்கை தொகுதி எம்பியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான கார்த்தி சிதம்பரம், தனியாக கட்சி நடத்துவது சிரமமான காரியம் என்பது பட்டால் தான் விஜய்-க்கு தெரியும் என்றும், விஜயும் பட்டு தெரிந்து கொள்வார் என்றும் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஆகஸ்ட் 22 தேதி நடந்தது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு திட்டங்கள் குறித்து விவரித்தனர்.

குறிப்பாக இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியிலிருந்து நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது, நிதி போதுமான அளவுக்கு உள்ளதா என்பது குறித்தும் அரசு அதிகாரிகளிடம் கார்த்தி சிதம்பரம் கேட்டறிந்தார். மேலும் என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு நிதி தேவை என்பதையும் ஆய்வு செய்தார்.
இந்த கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று அந்தக் கட்சியின் கொடி வெளியீடு குறித்து கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம், " இங்கே கட்சியை அறிவிப்பது என்பது ஒரு பெரிய விஷயம் கிடையாது. ஈஸியாக கட்சியை அறிவித்துவிடலாம். கொடியை போட்டுவிடலாம். லெட்டர் பேடு அடித்துவிடலாம். ஆனால் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.
அதாவது ஒவ்வொரு விஷயத்திலும் நிலைப்பாடு என்ன என்பதை விஜய் தெரிவிக்க வேண்டும். நீட் விவகாரத்தில் நிலைப்பாடு என்ன, ஜிஎஸ்டி விவகாரத்தில் நிலைப்பாடு, அகனிவீர் திட்டம் குறித்து நிலைப்பாடு என்ன, நீர் பங்கீடு குறித்த விஷயத்தில் நிலைப்பாடு என்ன, மாநிலங்களின் உரிமைகள் விஷயத்தில் நிலைப்பாடு, லேட்ரல் என்ட்ரி திட்டம் பற்றிய நிலைப்பாடு, வக்பு போர்டு குறித்த நிலைப்பாடு என்ன, என ஒவ்வொரு விஷயத்திலும் விஜயின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஒவ்வொரு நிகழ்விலும் நிலைப்பாடு என்ன என்பதையும் விஜய் தெளிவுபடுத்த வேண்டும். வெறும் கட்சியை அறிவித்துவிட்டு, கொடியை வெளியிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டால் மட்டும் போதாது. நாம் எல்லோரிடமும் தான் தமிழ் பற்று, தேசப்பற்று உள்ளது. எனக்கும் தான் தேசியப்பற்று உள்ளது. இது ஸ்பெசல் என்று கூற முடியாது. விஜய் தனது கட்சியின் அவரது கொள்கை என்ன என்பதை விவரிக்க வேண்டும். விஜய் தனது கொடியை அறிமுகப்படுத்தி வைத்தது குறித்து நான் எந்த கருத்தும் கூற முடியாது. தனியாக கட்சி நடத்துவது என்ன என்பது அவருக்கு பட்டால்தான் தெரியும். சகோதரர் விஜயும் பட்டு தெரிந்து கொள்வார்.
முதலமைச்சரின் நிவாரண நிதி பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும். உயிரிழப்புகள் ஏற்படும்போது அனைவருக்கும் ஒரே மாதிரியான இழப்பீடுத் தொகையினை தமிழக அரசு வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த முடியாது. நடந்த பிறகு விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டனைதான் பெற்றுக் கொடுக்க இயலும். இந்த விஷயத்தில் சமுதாய மாற்றம் அவசியமாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க கற்றுக் கொடுத்தல் வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். அரசாங்கத்தால் மட்டுமே தீர்வு காண முடியாது இயலாது என்றார்.
தமிழகத்தில் வாய்ப்பு கொடுத்தால் பாஜக தலித் முதலமைச்சரை உருவாக்குவோம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா கூறிய கருத்துக்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம், "எச்.ராஜா அண்ணாமலையைக் கேட்டு சொல்கிறாரா? கேட்காமல் பேசுகிறாரா? என்பது தெரியவில்லை" என்று கூறினார்.
சீமான் பற்றி பேசுகையில், "சீமான் அரசியல் கருத்துக்களைப் பேச வேண்டுமே தவிர, தனிப்பட்ட ஒருவருடைய வாழ்க்கை குறித்தும், அவர்களுடைய பிரச்னையை குறித்தும் பேசுவது தவறு. இது அரசியலுக்கு அழகல்ல" என்றார்.












Click it and Unblock the Notifications