"தமிழ்நாட்டில் தொழில் தொடங்க.. பல்வேறு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன!" அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்
புதுக்கோட்டை: இந்தியாவிலேயே தொழில் துறையில் வளர்ந்த மாநிலமான தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் போட்டிப் போடுகின்றன என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மரமடக்கி சுனையக்காடு, மறமடக்கி, திருநாளூலூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தின் நகைக் கடன் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நகைக் கடன் திரும்பப் பெறும் பயனாளிகளுக்கு நகைகளை வழங்கினார்.

நகை கடன்
அறந்தாங்கி ஒன்றியத்துக்குட்பட்ட சுனையக்காடு மரமடக்கி திருநாளூலூர் ஊராட்சிகளில் 5 பவுன் கீழ் நகைக் கடன் வழங்கப்பட்ட ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பின்படி தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகப் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் 36804 பயனாளிகளுக்கு ரூபாய் 11783.2 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் மெய்யநாதன்
அதில் அறந்தாங்கி சரகத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் மொத்தம் 13489 பயனாளிகளுக்கு ரூபாய் 4511 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், "தமிழகத்தில் முழுவதும் 6 ஆயிரம் கோடி நகைக் கடன் பெற்றவர்கள் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.

போட்டி போடுகின்றனர்
தற்போது இந்தியாவிலேயே தமிழகம் வளர்ந்த மாநிலமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் போட்டிப் போடுகின்றனர். ஆளும் கட்சியில் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதிகாரிகள் இருந்தாலும், தவறு செய்தால் முதல்வர் உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார். தற்போது நடைபெறும் ஆட்சி மனுநீதி சோழன் ஆட்சி போல் உள்ளது. உலக நாடுகள் தொழில் முதலீடு செய்யத் தமிழ்நாட்டிற்குத் தயாராக உள்ளது. பல ஆயிரம் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு வரும்பட்சத்தில் நகர் மற்றும் ஊரக வளர்ச்சி பகுதிகளில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

வேலைவாய்ப்பு பெருகும்
தொழில் துறை சம்பந்தமாகக் கடந்த இரண்டு தினங்களாகத் துபாயில் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருக அதிக வாய்ப்பு உள்ளது" என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அறந்தாங்கி ஒன்றிய பெருந்தலைவர் சண்முகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமொழியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications