சசிகலா பாஜகவில் இணைய வேண்டும்! அழைப்பு விடுத்த நயினார் நாகேந்திரன்! அரசியலில் புது குண்டு!
புதுக்கோட்டை: பாரதிய ஜனதா கட்சியில் சசிகலா இணைந்தால் அது தங்களுக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மனம் திறந்து அழைப்பு விடுத்திருக்கிறார்.
சசிகலாவை இணைத்துக் கொண்டால் தான் அதிமுக வலிமை பெறும் என்றும் அதில் அதிமுக தலைமைக்கு விருப்பம் இல்லாவிட்டால் சசிகலா பாஜகவில் இணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சசிகலா பாஜகவில் இணைந்தால் அவரை மனமாற தாங்கள் வரவேற்போம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

சசிகலாவுக்கு அழைப்பு
புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக சட்டமன்ற பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொண்டால் அக்கட்சி வளரும், அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறினால் பாஜகவில் இணையுமாறு நாங்கள் அவரை வரவேற்போம். சசிகலா இணைந்தால் அது பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.''

காற்றில் வாக்குறுதி
''கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஏன் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வில்லை என்று திமுக கேட்டது. ஆனால் இரண்டு முறை தற்போது பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்து விட்டது. இருப்பினும் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க தயாராக இல்லை. பெயரளவிற்கு பெட்ரோல் விலையை மட்டும் சிறிது குறைத்து விட்டு அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு வருகின்றனர்.''

திமுகவினர் பெருமை
''ஒன்றிய அரசு என்று கூறுவதை திமுகவினர் பெருமையாக கருதுகின்றனர். திமுக தங்களை பெருமை படுத்திக் கொள்வதை முன்னிலைப் படுத்திக் கொள்கிறதே தவிர மக்கள் பிரச்சினையை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.'' இவ்வாறு புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

புது குண்டு
இதனிடையே சசிகலாவுக்கு பாஜக அழைப்பு விடுத்திருப்பது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக சசிகலாவின் வரவு தமிழக பாஜகவுக்கு உறுதுணையாக இருக்கும் என பொதுவெளியில் அக்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தளவுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு நபரை, அதுவும் தேசியக் கட்சியே அழைப்பு விடுக்கும் சசிகலாவை அதிமுக தலைமை எதன் காரணமாக கட்சியில் இணைக்க தயக்கம் காட்டுகிறது என்ற கேள்வியும் அடுத்தடுத்து எழுகிறது.












Click it and Unblock the Notifications