மக்கள் கிராம சபை கூட்டத்தில்...அ.தி.மு.க.வினர் சர்ச்சை உருவாக்குறாங்க...ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!
புதுக்கோட்டை: திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.
Recommended Video
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி என்று முடிவானதோ அன்றே தி.மு.க. கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது எனவும் அவர் கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:- அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களை சந்திப்பது இயல்புதான். அதே போன்று தான் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மக்களை சந்தித்து வருகிறார். தி.மு.க. நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் சர்ச்சையை உருவாக்குகின்றனர்.
விவசாயிகள் போராட்டம் டெல்லியில் தொடர்ந்து நடந்து வருகிறது. 40 விவசாயிகள் இறந்துள்ளனர் ஆனால் மத்திய அரசு தனது பிடிவாதத்தை மாற்றிக் கொள்ள மறுக்கிறது. பணமதிப்பிழப்பு, சீனா ஊடுருவல் தொடங்கி விவசாயிகள் போராட்டம் வரை மத்திய அரசு தனது பிடிவாதத்தை மாற்றிக் கொள்வது கிடையாது.
பொதுமக்கள் சொன்னபடி தான் குடி ஆட்சி நடக்க வேண்டும். ஆனால் இந்த அரசுக்கு குடிமக்கள் கூறுவதும் பொருட்டு இல்லை. நாடாளுமன்றமும், நாடாளுமன்ற விவாதமும் பொருட்டு இல்லை. பா.ஜ.க. அரசு முரட்டுத்தனமான இயந்திரமாக செயல்படுகிறது. இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி ஏற்பட்டதோ அன்றைக்கே தி.மு.க. கூட்டணியின் வெற்றி உறுதியானதாக கூறினேன்.
அதேதான் தற்போதும் கூறுகிறேன். அ.தி.மு.க.-பாஜக கூட்டணி என்று முடிவானதோ அன்றே தி.மு.க கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
பா.ஜ.க.தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று கூறி சிரிப்பு வெடிகுண்டுகளை வெளியிட்டு வருகின்றனர். ரஜினிகாந்த் எனது நீண்ட நாள் நண்பர். அவருடைய அரசியல் இறுதி முடிவை நான் மகிழ்வுடன் வரவேற்கிறேன் என்று ப.சிதம்பரம் கூறினார்.












Click it and Unblock the Notifications