வேங்கைவயலில் விசிக போராட்டம்? போலீஸார் குவிப்பு!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலந்ததாக சொல்லப்படும் சம்பவத்தில் பட்டியலின வகுப்பை சேர்ந்த 3 பேரை கைது செய்ததை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தவுள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காட்டில் வேங்கைவயல் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் டிஎன்ஏ சோதனை எல்லாம் செய்யப்பட்டது.

இதுகுறித்து குற்றப்பத்திரிகை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்திருந்தனர். அதில் முத்துக்கிருஷ்ணன், சுதர்சன், முரளி ராஜா ஆகிய 3 பேர்தான் இந்த செயலை செய்தது என்றும் முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்க இது போல் செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கோ தொடர்பிருக்கும் நிலையில், பட்டியலினத்தை சேர்ந்த 3 பேரை குற்றம்சாட்டுவதாக பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதை கண்டித்து இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார்.
அது போல் இந்த சம்பவத்தை கண்டித்து வேங்கைவயலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பேரிகார்டு போட்டு போலீஸார் கண்காணித்து வருகிறார்கள்.
போலீஸாரின் இந்த குற்றப்பத்திரிகை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருப்பதாவது: வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது; மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
வேங்கை வயல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ. டி சார்பில் இன்று பிரமாண பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை.
எனவே, சிபிசிஐடி சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
வேங்கை வயலில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குற்றம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த வழக்கில் காவல்துறை பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. அந்தச் சூழ்நிலையில்தான் இந்த வழக்கை 14.01.2023 அன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. சிபிசிஐடி இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட நிலையில்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மெத்தனமாகவே இருந்தது. உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் இதில் கடுமையாக அறிவுறுத்திய பிறகும்கூட குற்றவாளிகள் யார் எனக் காவல்துறை கூறவில்லை. தற்போது இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் , சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அய்யத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.
உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம் சிபிசிஐடி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம்.
அத்துடன், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications