'குட்கா புகழ் விஜயபாஸ்கர்'- புதுக்கோட்டையில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சால் சலசலப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பிரச்சாரத்தின் போது குட்கா புகழ் விஜயபாஸ்கர் என பிரேமலதா விஜயகாந்த் பேசியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை தொகுதி தேமுதிக வேட்பாளர் வி.இளங்கோவனை ஆதரித்து புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று இரவு பிரச்சாரம் செய்தார்.
அப்போது பிரேமலதா பேசுகையில், "எங்கள் கூட்டணி மக்களுக்கு நல்லது செய்வதை பற்றித்தான் பேசி வருகிறது ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எப்போதுமே குறைசொல்வதை மட்டுமே தன்னுடைய வழக்கமாக வைத்துள்ளார். இதனால் அவரை ஒட்டுமொத்த தமிழகமும் புறக்கணித்துள்ளது.

குட்கா புகழ்
நமது அமைச்சர் விஜய பாஸ்கரை குட்கா புகழ் விஜயபாஸ்கர் என்று ஸ்டாலின் சொல்வார். (கூட்டத்தில் அதிர்ச்சி- தொண்டர்கள் கத்தினர்) இந்த வார்த்தையை எப்போதுமே ஸ்டாலின் தான் சொல்லிக்கொண்டு இருப்பார்.

ஸ்டாலினுக்கு பட்டபெயர்
அதனால் இன்றைக்கு நாம் புதுக்கோட்டையில் ஸ்டானுக்கு ஒரு பெயர் வைப்போம். குறைசொல்லிக்கொண்டே இருப்பதால் அவரை குறை சொல்லி புகழ் ஸ்டாலின் என அழைப்போம். ஒரு எதிர்க்கட்சி தலைவராக மக்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்.நாட்டுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை சொன்னால் மக்கள் வரவேற்பார்கள்.
எப்ப பார்த்தாலும் அடுத்தவர்களை குறைசொல்லியே வாழ்பவர்கள் ,குறைசொல்லியே மடிவார்கள் என்பதற்கு ஸ்டாலின் தான் ஒரே ஒரு முன் உதாரணம்.

மோடி வலிமையானவர்
நமது பாரதத்தின் பிரதமராக மோடி தான் வரப்போகிறார். அவர் பெயரை சொல்லித்தான் நாம் வாக்கு கேட்டு வருகிறோம். ஆனால் ஸ்டாலினிடம் உங்கள் கூட்டணியில் பிரதமர வேட்பாளர் யார் என்பதை கேளுங்கள். அதற்கு பதிலே இருக்காது. இன்றைக்கு வலிமை மிக்க பாரத பிரதமராக நரேந்திரமோடி திகழ்கிறார்.

காங். பிரதமர் யார்
ஆனால் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியா, சோனியா காந்தியா, பிரியங்கா காந்தியா, மம்தா பானர்ஜியா அல்லது சந்திரபாபு நாயுடுவா என சொல்லத் திராணியில்லாத கூட்டணியாக காங்கிரஸ் கூட்டணி திகழ்கிறது. ஆனால் நம் கூட்டணியில் உள்ள பிரதமர் மோடி புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்து வலிமையான பிரதமராக திகழ்கிறார்

கொடநாடு பிரச்னை
சாதிக்பாட்சா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் யார் என்று ஸ்டாலின் சொல்லிவிட்டு, கொடநாடு பிரச்சினை குறித்து பேச வேண்டும். 2011-ல் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் சேர்ந்து அமைத்த அதே கூட்டணி மீண்டும் அமைந்திருக்கிறது.. 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. அதிமுக கூட்டணியை எதிர்த்து போட்டியிடுவோரை டெபாசிட் இழக்கச் செய்வோம்" இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.












Click it and Unblock the Notifications