"தூக்குல போடணும்".. புதுக்கோட்டை சிறுமியை நாசம் செய்து கொன்ற கொடூரம்.. மாவட்ட எஸ்பி ஆவேசம்
புதுக்கோட்டை: 7 வயது குழந்தையை நாசம் செய்து, படுகொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை வழங்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் என்ற கிராமத்தில் வசித்து வந்த 7 வயது சிறுமியை ராஜா என்ற பூக்கடைக்காரர் பலாத்காரம் செய்துவிட்டார்.. பின்னர் சிறுமியின் கழுத்தை அறுத்து கொன்று கண்மாயில் உள்ள புதரில் வீசிவிட்டார். இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறந்தாங்கி சிறுமி உயிரிழந்ததற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருவதுடன், குற்றவாளியை விட்டுவிடக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.. இந்நிலையில், இன்று காலை, புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி, எம்எல்ஏ ரத்தின சபாபதி, மாவட்ட எஸ்பி அருண்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் அறிவித்த 5 லட்ச ரூபாய்க்கான காசோலையையும் வன்கொடுமை தடுப்புச் சட்ட உதவி தொகை 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினர்.. இதன் பின்னர் சிறுமியின் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர், "கோர்ட் மூலம் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது.. இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் காவல் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை நடந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் அளிக்கவேண்டும்.. பெற்றோர்கள் மிக கவனமாக தங்களது குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

பின்னர் பேசிய மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார், "இந்த வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி... அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. அவரிடம் இருந்து பல்வேறு விதமான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன... இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருப்பதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.. மேலும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications