புதுக்கோட்டை மாவட்ட அரசு விழாக்கள்... திமுக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட அரசு நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களில் திமுக எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை மாவட்ட நிர்வாகம் தவிர்ப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 3 திமுக எம்.எல்.ஏக்களுக்கும் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கும் இடையே அவ்வப்போது லடாய் ஏற்பட்டு வருகிறது.
அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் உரிய மரியாதை தருவதாகவும், திமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
6 எம்.எல்.ஏக்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகளில் திமுகவை சேர்ந்தவர்களும், 3 தொகுதிகளில் அதிமுகவை சேர்ந்தவர்களும் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இந்நிலையில் 3 திமுக எம்.எல்.ஏ.க்களையும் அரசு நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முறையாக அழைப்பு விடுப்பதில்லை என்றும், தொடர்ந்து அவமானப்படுத்தப் படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
அதிமுக மகளிரணி
இதனிடையே கடந்த வாரம் திருமயம் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ.ரகுபதி, மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியை கடுமையாக விமர்சித்தார். மாவட்ட ஆட்சியரா இல்லை அதிமுக மகளிரணிச் செயலாளரா எனக் கேள்வி எழுப்பியதோடு, கூட்டுறவு பதிவாளர் தீபாவையும் கடுமையாக விமர்சித்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
ஆல் இன் ஆல் அமைச்சர்
புதுக்கோட்டையை பொறுத்தவரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டம் ஆகும். இங்கு ஆல் இன் ஆல் அவர் எடுக்கும் முடிவுகள் தான், அப்படியிருக்க திமுக எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட ஆட்சியரை மட்டும் குறை சொல்வதில் நியாயமில்லை. இது அவர்களுக்கும் தெரியும் ஆனாலும் ஆட்சியர் உமா மகேஸ்வரியை வைத்து எதற்காக அரசியல் செய்கிறார்கள் எனப் புரியவில்லை என்கிறார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பணிபுரியும் முக்கிய பெண் அதிகாரி ஒருவர்.
காவல்நிலையம்
இந்நிலையில், அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக திமுக எம்.எல்.ஏ. ரகுபதி மீது சேக் என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை நகர காவல்நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.