"40 வயசாயிடுச்சு.. இன்னுமா கல்யாணம் ஆகல?" நக்கலடித்த சக ஊழியர்கள்.. உயிரை விட்ட புதுக்கோட்டை ஆசிரியை
திருமணம் ஆகாததற்கு நான் என்ன செய்வேன்.. என்னுடைய வேதனை இவர்களுக்கு கேலிக்கூத்தாக இருக்கிறதே.. என மனம் வெதும்பி இருக்கிறார் ரேவதி.
புதுக்கோட்டை: தனக்குத் திருமணம் ஆகாதது குறித்து சக மனிதர்கள் ஏளனமாகவும், பரிதாபமாகவும் கேள்விகளை எழுப்பி வந்ததால் மனம் உடைந்த ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தவர்களின் மனதைக் காயப்படுத்துவதையே முழுநேர வேலையாகச் செய்து வரும் கீழ்த்தரமான மனிதர்கள் இன்னும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு இந்த சோக சம்பவமே சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரேவதியின் நண்பர்கள் மற்றும் சக ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியும் மனிதர்கள்..
அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதையும், அவர்களின் அந்தரங்க விஷயங்கள் குறித்துக் கேள்வியெழுப்புவதையும் சிலர் வாடிக்கையாகவே வைத்து சுற்றித்திரிகின்றனர். திருமணம் தாமதமாகிக் கொண்டிருப்போரிடம் அனைவரின் முன்னிலையிலும் வைத்து "என்னப்பா.. வயசு இத்தன ஆயிருச்சி, இன்னும் கல்யாணம் பண்ணாம சுத்திட்டு இருக்கியே.." என கேட்டும் இங்கீதம் தெரியாத மனிதர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். சரி.. திருமணமும் செய்தாகிவிட்டது என்றாலும் இவர்கள் விட மாட்டார்கள். அடுத்த மாதம் முதலே, ஏதாச்சும் விசேஷம் இருக்கா என நச்சரிக்க தொடங்கிவிடுவார்கள். இதுபோன்ற நபர்கள் செய்த தொந்தரவால் ஒரு அப்பாவி பெண் தன் உயிரையே மாய்த்துக்கொள்ளும் நிலைக்குச் சென்றிருக்கிறார்.

திருமணம் ஆகவில்லை
புதுக்கோட்டை மாவட்டம் மாலையீட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (40). இவர் அங்குள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் அவரது வீட்டிலும் அவருக்கு வரன் தேடி வந்துள்ளனர். ஆனால் எந்த வரனும் அவருக்கு அமையவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஒருகட்டத்துக்கு மேல் ரேவதி விரக்தி அடைந்துள்ளார்.

கேலி பேச்சுகள்
இதனிடையே, ரேவதியுடன் பணிபுரியும் சக ஆசிரியைகளும், ஆசிரியர்களும் தினமும் கேலியான வார்த்தைகளாலும், கேள்விகளாலும் அவரை துளைத்தெடுத்து வந்திருக்கின்றனர். 40 வயது ஆகிவிட்டது.. இன்னும் திருமணம் ஆகவில்லையா.. இனிமேலும் உனக்கு திருமணம் நடக்கும்னு நினைக்கிறியா என்பன போன்ற கேள்விகளை கேட்டு ரேவதியின் மனதை அவர்கள் நோகடித்து வந்திருக்கின்றனர். தினம் தினம் இதுபோன்ற கேள்விகளை எதிர்கொண்டு வந்த ரேவதிக்கு வாழ்க்கையே வெறுத்து போய்விட்டது.

தற்கொலை - வாக்குமூலம்
திருமணம் ஆகாததற்கு நான் என்ன செய்வேன்.. என்னுடைய வேதனை இவர்களுக்கு கேலிக்கூத்தாக இருக்கிறதே.. என மனம் வெதும்பி இருக்கிறார் ரேவதி. தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்த ரேவதி, சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்ய முடிவெடுத்து எலி பேஸ்ட்டை சாப்பிட்டிருக்கிறார். இதை பார்த்த அவரது பெற்றோர் அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரேவதி உயிரிழந்தார். சக ஆசிரியர்களின் கேலி கிண்டலை தாங்க முடியாமல் விஷம் சாப்பிட்டடதாக ரேவதி வாக்குமூலம் அளித்துள்ளார். இதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சக ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications