"கருவில் பெண் சிசு!" கருக்கலைப்பு செய்த இளம்பெண் திடீர் மரணம்.. புதுக்கோட்டையில் ஷாக் சம்பவம்
புதுக்கோட்டை: கருவில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரிந்து கருக்கலைப்பு செய்த போது பெண் உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் இப்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து இப்போது அப்பகுதி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்
நமது இந்தியாவில் கருவில் இருப்பது ஆண் சிசுவா இல்லை பெண் சிசுவா என்பதைக் கண்டறிந்து சொல்வது தண்டனைக்குரிய குற்றம். பெண் குழந்தைகள் சிசுவிலேயே கொல்லப்படுவதைத் தடுக்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஷாக் சம்பவங்கள்: அதன்படி ஒரு பெண் கருவுற்று இருக்கும் போது மருத்துவர்கள் அந்த சிசுவின் பாலினத்தைத் தெரியப்படுத்தக் கூடாது. அப்படிக் கண்டறிந்து சொன்னால் மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கப்படும், பாலினத்தைத் தெரிந்து கொள்ள முயன்ற தம்பதி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தளவுக்குக் கடுமையான சட்டங்கள் இருந்தாலும் கூட அதையும் தாண்டி பாலினத்தைக் கண்டறிந்து பெண் சிசுக் கொலை சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அப்படியொரு மோசமான சம்பவம் தான் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது. கருக்கலைப்பு செய்த போது அந்த பெண் எதிர்பாராத விதமாகப் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனியார் மருத்துவமனை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருவில் இருப்பது ஆண் சிசுவா இல்லை பெண் சிசுவா என்பதைச் சட்ட விரோதமாக மருத்துவ சோதனை செய்து சொல்லி வந்துள்ளது. அதன்படி சமீபத்தில் புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கருவில் இருப்பது எந்த சிசு என்பதைத் தெரிந்து கொள்ள இந்த மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது கருவில் இருப்பது பெண் சிசு என்பது தெரிய வந்துள்ளது.
உயிரிழப்பு: இதையடுத்து அந்த பெண் கருக்கலைப்பு செய்யச் சம்மதித்துள்ளார். 19 வாரக் கருவைச் சுமந்து கொண்டிருந்த இருந்த அந்த பெண்ணுக்குத் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துவிட்டார்.. இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை மூடி சீல் வைக்க வேண்டும் என்று அந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு கூடி போராட்டம் நடத்தினர்.
போராட்டம்: உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இது தொடர்பான தகவல் கிடைத்த உடன் அப்பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், சம்மந்தப்பட்ட மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். கருவில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரிந்து கருக்கலைப்பு செய்த போது பெண் உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications