குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த அரக்கன்கள்! புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த அவலம்! காங்.கண்டனம்!
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவாசல் என்ற கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் சமூகவிரோத சக்திகள் மலத்தை கலந்திருக்கும் செயல் கடும் நடவடிக்கைக்கு உரியது என காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற அநாகரீக செயல்கள் நடக்காமல் இருப்பதற்க முதல்வர் ஸ்டாலின் சமுக விரோத தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக செல்வப்பெருந்தகை விடுத்துள்ள கண்டனப் பதிவில் கூறியிருப்பதாவது;
பட்டியல் சமூக மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் அருகேயுள்ள இறையூர் வேங்கைவாசல் என்ற கிராமத்தில் வசித்து வரும் பட்டியல் சமூக மக்கள் குடிநீருக்கு அன்றாடம் பயன்படுத்தும் குடிநீர் மேல்தொட்டியில் (டேங்க்) சில சமூகவிரோத மனப்பான்மை கொண்டவர்கள் மலத்தை கலந்திருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
அநாகரீக செயல்
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கழித்தும் இது போன்ற மனோபாவம் கொண்டவர்கள். நாகரீக சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இச்சம்பவத்தை கேள்விப்படும் போது மிகப்பெரிய பதற்றத்தை உண்டாக்குகிறது. இந்த அநாகரீக செயலால் அப்பகுதி மக்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
கடுமையாக நடவடிக்கை
வடமாநிலங்களில்தான் சங்பரிவார் அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்.. பா.ஜ.க.வினர். பட்டியல். பழங்குடியின மக்கள் மீது வாயில் மலத்தை திணிப்புத. சீறுநீர் கழிப்பது போன்ற சம்பவங்கள் நடப்பதை கேள்விப்பட்டுக் கொண்டிருந்தோம். தற்போது உருமாறி வேறுவகையில் தமிழ்நாட்டிற்குள்ளேயும் வந்துள்ளதோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் கேள்விப்பட்டவுடன் சட்டத்துறை அமைச்சர் சே.ரகுபதி அவர்களை தொடர்பு கொண்டு பேசியவுடன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு கடுமையாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக சொல்லியிருக்கிறார்.
இரும்புக்கரத்தால் அடக்கவேண்டும்
பட்டியல் இனத்தவர்கள் மீதான சாதிய வன்கொடுமை தொடர்பாகவுள்ள அனைத்து சட்டப்பிரிவுகளையும் அவர்கள் மீது வழக்குபதிவு செய்யவேண்டுமெனவும். எதிர்காலத்தில் இதுபோன்ற அநாகரீக செயல்களை நடக்காமல் இருப்பதற்கு தமிழக முதல்வர் அவர்கள் இந்த சமுக விரோத தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.