என்ன பாவம் பண்ணோம்.. குடிக்கிற தண்ணில அசிங்கத்த கலந்துட்டானுகளே! சமூக நீதி குழுவிடம் கதறிய மக்கள்!
புதுக்கோட்டை : குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் புதுக்கோட்டை வேங்கைவயலில் சமூக நீதி கண்காணிப்பு குழு ஆய்வு செய்துள்ள நிலையில் அரசிடம் அறிக்கை அளிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியல் இனத்து மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மற்றும் ஆய்வு செய்வதற்காக ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை செய்த போது அந்த பகுதியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு பட்டியல் இனத்து மக்களை அனுமதிக்கவில்லை என்ற புகார் எழுந்தது.
குடிநீர் தொட்டியில் மலம்.. புதுக்கோட்டை சாதி வெறியர்களை கைது செய்யாதது ஏன்? ஹென்றி திபேன் கேள்வி
குடிநீரில் மலம்
மேலும் அங்கு உள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்படுவதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பட்டியல் இனத்து மக்களை மாவட்ட ஆட்சியர் கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு செய்தார். மேலும் அந்த டீக்கடை உரிமையாளர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று கோயிலில் சாமி ஆடி தரக்குறைவாக பேசிய மூதாட்டி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார்
சமரச பேச்சுவார்த்தை
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து சமுதாய மக்களையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து சமுதாய மக்களும் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து அப்பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணை குழு
இந்த தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது யார்? என்று கண்டுபிடிப்பதற்காக திருச்சி டிஐஜி சரவண சுந்தரால் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட குழுவினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அச்சம்பவம் தொடர்பாக 70 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சம்மன் சிலருக்கும் அனுப்பட்டுள்ளது. இவ்விவகாரம் பெரிதாகியுள்ள நிலையில், சில கட்சிகள் போராடியும் வருகின்றன.
கவன ஈர்ப்பு தீர்மானம்
இந்த சம்பவம் நடைபெற்று 20 தினங்களுக்கு மேலாகியும் இதனால் வரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றும் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதாக வேண்டும் என்று கூறி அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தனர். இந்த தீர்மானத்திற்கு பதில் அளிக்க வகையில் பேசிய முதலமைச்சர் உண்மையான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அரசு சார்பில் சமூக நீதி கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குழுவில் பேராசிரியர் சாமிநாதன் தேவதாஸ் பேராசிரியர் ராஜேந்திரன் உறுப்பினர் கருணாநிதி மற்றும் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என்றும் அறிவித்தார்
சமூக நீதிக் கண்காணிப்பு குழு
இந்நிலையில் வேங்கை வயல் கிராமத்தில் சமூக நீதி கண்காணிப்புக்குழு ஆய்வு செய்யும் என்று தமிழக அரசு அறிவித்தபடி இன்று குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் புதுக்கோட்டை வேங்கைவயலில் சமூக நீதி கண்காணிப்பு குழு ஆய்வு செய்துள்ள நிலையில் அரசிடம் அறிக்கை அளிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. . சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், ராஜேந்திரன், கருணாநிதி, சாந்தி ரவீந்திரநாத் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
அரசிடம் அறிக்கை
மேலும் பட்டியன மக்கள் வசிக்கும் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து சமூக நீதி கண்காணிப்பு குழுவினர் நடந்த கொடுமை குறித்து கேட்டறிந்தனர். குற்றச்செயலில் ஈடுபட்டது யார்? என ஏற்கனவே 70 பேரிடம் காவல்துறை விசாரித்துள்ளது. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த அவலம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த ஆய்வுக்கு பிறகு ஆட்சியருடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தமிழக அரசிடம் இந்த குழு அறிக்கை சமர்பிக்க்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.