இன்னும் 20 நாளில்.. தமிழ்நாட்டில் உருவாக போகும் புதிய மாநகராட்சி.. எந்த பகுதி தெரியுமா?
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாநகராட்சியாக விரைவில் மாற்றப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வருடம் சட்டசபையில் அமைச்சர் கே.என். நேரு மூலம் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பின்படி புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகரங்களை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் அரசாணை வெளியிட்டது.

இப்போது இதை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் நடக்கின்றன. அடுத்த 20 நாட்களில் முழுமையாக புதுக்கோட்டை மாநகராட்சியாக செயல்பாட்டிற்கு வந்துவிடும்.,
புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 அண்டை கிராம பஞ்சாயத்துகள் புதுக்கோட்டை மாநகராட்சியின் பகுதிகளை உருவாக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோலம் திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 கிராம பஞ்சாயத்துகள் புதிய திருவண்ணாமலை மாநகராட்சியை அமைக்கும்.
நாமக்கல் நகராட்சி மற்றும் 12 கிராம பஞ்சாயத்துகள் இணைந்து புதிய நாமக்கல் நகராட்சியாக மாறும். காரைக்குடி நகராட்சி, இரண்டு டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் ஐந்து கிராம பஞ்சாயத்துகள் இணைந்து காரைக்குடி மாநகராட்சியாக மாறும்.
திட்டம் என்ன?: "தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998ன் கீழ் வகுக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, புதிய மாநகராட்சிகள் நிறுவப்படும்," என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது. இது தொடர்பான G.O. மார்ச் 15, 2024 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதற்கான பூர்வாங்க பணிகள் தற்போது நடக்கின்றன.
புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் மாவட்டத் தலைமையகமாக இருக்கும் அதே வேளையில், காரைக்குடி சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நகரமாக விளங்கி, அந்த மாவட்டத்தின் முதல் மாநகராட்சியாக மாறி உள்ளது.
தற்போது, சென்னை மாநகராட்சியை தவிர, தமிழகம் முழுவதும் 20 மாநகராட்சிகள் உள்ளன: மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகியவை ஆகும்.
விரிவாக்கம்: நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகை சதவீதம் 48.45% ஆகும். தற்போது, நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் தொகையின் சதவீதம் 53% க்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது போக சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை பெருநகரத்திற்குள் புதிதாக பல கிராமங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே 2022ல் சென்னை விரிவாக்கப்பட்டது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வானகரம், அயனம்பாக்கம், அடையாளம்பட்டு ஆகியவற்றை பெரு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கும் பணியை தமிழக அரசு தொடங்க உள்ளது.
அதேபோல் மேடவாக்கத்தை சென்னை மாநகராட்சி உடன் இணைக்கும் முடிவும் எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சென்னையின் அளவு பெரிதாகும். சென்னையை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த சில வருடங்களாகவே நடந்து கொண்டு இருக்கின்றன. அனைத்து திட்டங்களும் சென்னையில் ஒரு சில இடங்களுக்குள் குவிவதற்கு பதிலாக அருகாமையில் இருக்கும் மாவட்டங்களுக்கும் செல்லும் வகையில் சென்னை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
முக்கியமாக சென்னையில் போக்குவரத்து நெரிசல், மக்கள் தொகை ஆகியவற்றையும் இடநெருக்கடியையும் கட்டுப்படுத்தும் விதமாக இந்த விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை அளவு: சென்னை தற்போது 1189 சதுர கிலோ மீட்டர் அளவில் உள்ளது. இது பெங்களூரின் அளவை விட அதிகம் ஆகும். பெங்களூர் நகரம் 741 சதுர கிலோ மீட்டர் கொண்டது. இந்த நிலையில்தான் சென்னையை 4 மடங்கிற்கும் மேல் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது சென்னையை 5,904 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூரை விட பல மடங்கு அதிகம் ஆகும்.
முன்னதாக சென்னையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டை சேர்ந்த சில கிராமங்கள் இடம்பெற்று இருந்தன. தற்போது காஞ்சிபுரத்தில் மேலும் சில கிராமங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அதேபோல் செங்கல்பட்டை சேர்ந்த பல கிராமங்கள் சென்னை பெருநகரத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன. ராணிப்பேட்டையை சேர்ந்த கிராமங்களும் இந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டு உள்ளன. திருவள்ளூரில் இருந்தும் பல கிராமங்கள் இந்த லிஸ்டில் இணைக்கப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications