ஏழை இளைஞரை முதலாளியாக்கிய மனு!... ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ செய்த மாற்றம்!
புதுக்கோட்டை: ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மக்களின் குறைகளைக் கேட்கத் தொடங்கியவர் ஸ்டாலின். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பயணத்தைத் தொடங்கி ஊர் ஊராகப் போய் மக்களிடம் மனுக்களைப் பெற்றார்.
அப்போது ஆளும் கட்சியினர் சிலர், 'அத்தைக்கு எப்போது மீசை முளைப்பது? அவர் எப்போது சித்தப்பா ஆவது?' என்று விமர்சனம் செய்தனர். மேலும் சிலர் இந்த மனுக்களை எல்லாம் என்றைக்குப் படிப்பது? எப்போது குறைகளைத் தீர்ப்பது? என்றும் பேசினர்.

ஆனால், அதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை ஸ்டாலின். முறையாக ஒவ்வொன்றாகக் கேட்டுப் பெற்றார். அப்படிப் பெறப்பட்ட மனுக்கள் மூலம் ஒருவரது வாழ்க்கையையே மாற்றிக் காட்டி இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஆமாம். இது சினிமா கதை அல்ல. உண்மைக் கதை.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனக்கு ஒரு அரசு வேலை வேண்டும் என்று மனு எழுதி ஸ்டாலினிடம் கேட்டிருந்தார். அந்த நபரின் கோரிக்கை மனு ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரிகளின் கைக்குச் சென்றது.
அம்மனுவைப் பரிசீலனை செய்த அதிகாரிகள் அவரை அழைத்து, 'அரசு வேலைகள் என்பது டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுமுறைகளை எழுதி வெற்றி பெறுபவர்களுக்குத் தான் வழங்கப்படும்.

ஆகவே, உங்களுக்கு நாங்கள் எந்தவகைகளில் எல்லாம் உதவ முடியும் என்பதை விளக்குகிறோம். அதில் ஒன்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று அறிவுரை வழங்கினர்.
அதிகாரிகள் வழங்கிய அறிவுரையை ஏற்று அந்த நபர் சாதாரண கடையை இன்று ஆண்ட்ராய்டு மொபைல் போன் கடையாக மாற்றி வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார். இது எப்படிச் சாத்தியமானது? அந்த இளைஞர் யார்? அவர் வாழ்வில் நடந்த மாற்றம்தான் என்ன?

"என் பெயர் பிரசாத். நான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக்காவில் உள்ள பிச்சினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவன். வம்பன் நாலு ரோடு பகுதியில் கடை வைத்திருக்கிறேன். இதே பகுதியில் 12 வருடங்களாகக் கடை வைத்திருக்கிறேன். நான் எம்.இ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படித்திருக்கிறேன். ஆகவே அதை வைத்துத்தான் மொபைல் சர்வீஸ் கடையை ஆரம்பித்தேன். முன்பு சின்ன சின்ன மொபைல் பொருள்களை வைத்து விற்பனை செய்துவந்தேன்.
இதனிடையே தான் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்று நிகழ்ச்சிக்காக எங்கள் ஊருக்கு வந்திருந்தார். திருமயம் பகுதியில் அவர் மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றார். அப்போதுதான் நான் அரசு வேலை கேட்டு அவரிடம் மனு ஒன்றைக் கொடுத்தேன்.

அவர் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு ஐஏஎஸ் அதிகாரியை அவர் நியமித்தார். சரியாக 6 மாதத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர். அப்போது எனக்குச் சென்னை கோட்டையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அரசு வேலை என்பது தேர்வு எழுதினால் மட்டுமே கிடைக்கும் என்று விளக்கம் அளித்தனர்.
அந்த உரையாடலின்போது என்னைப் பற்றி விசாரித்தார்கள். நான் கடை நடத்தி வருவதைச் சொன்னேன். அப்படி என்றால் நாங்கள் மானியத்துடன் கடனுதவி செய்து தருகிறோம். அதைக் கொண்டு உங்கள் தொழிலைப் பெருக்கிக் கொள்ளலாம் என ஆலோசனை தந்தனர்.

எனக்குப் பெரிய அளவில் பொருளாதார உதவி செய்வதற்கு யாருமே இல்லை. ஆகவே, அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது என முடிவு செய்தேன். அவர் உறுதி அளித்த ஒரே மாதத்தில் புதுக்கோட்டைத் தொழில் மையத்திலிருந்து அதிகாரிகள் அழைத்தனர். வங்கிக்கடன் மானியத்துடன் பெறுவதற்கான வழிமுறைகளை விளக்கினர். அதன்படியே செய்தேன். சரியாக ஒரே மாதத்தில் 5 லட்சம் வரை எனக்குக் கடனுதவி கிடைத்தது. அதில் எனக்கு 1லட்சத்து 25 ஆயிரம் மானியமாகக் கிடைத்தது.
அந்தத் தொகை எனக்கு மிகப் பெரியது. அதை வைத்து தான் இப்போது கலர் பிரிண்டர் வாங்கி இருக்கிறேன். அது குறைந்தது 70 ஆயிரம் வரை செலவாகும். அந்த மானியம் இந்த மிஷினை வாங்க உதவியாக இருந்தது.

கூடவே லேமினேஷன் மிஷின் வாங்கினேன். ஒரு ஜெராக்ஸ் மிஷின் வாங்கி இருக்கிறேன். முதலில் சின்ன சின்ன போன்களை வைத்து விற்பனை செய்தேன்.
இப்போது ஆண்ட்ராய்டு மொபைல்களை வாங்கி வைத்து விற்கும் அளவுக்கு இந்தப்பொருளாதார உதவி உறுதுணையாக இருந்தது.

இன்றைக்கு ஜெராக்ஸ் மூலம் தினம் 2 ஆயிரம் வருகிறது. அதில் குறைந்தது எனக்குத் தினம் 500 ரூபாய் இலாபம் கிடைத்துவருகிறது. இது போக லேமினேஷன், மொபைல் சர்வீஸ், புதிய மொபைல் விற்பனை மூலமும் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.
இந்தளவுக்கு என்னுடைய ஒரு மனுவுக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை அளித்து உதவுவார் எனக் கனவிலும் நினைக்கவில்லை. அந்த ஒரு மனு என் வாழ்க்கையையே புதியதாக மாற்றி அமைத்துவிட்டது. என் வாழ்நாளில் அவர் செய்த உதவியை மறக்கவே மாட்டேன்" என்கிறார் இந்த இளைஞர்.

இவரைப்போலவே முதல்வரின் உதவியால் தேங்காய் நார் தொழிற்சாலையைத் தொடங்கி வாழ்க்கையில் முன்னுக்கு வந்துள்ளார் ஒரு இளைஞர். அவர் என்ன சொல்கிறார்?
"என் பெயர் காமேஸ்வரன். நான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வசித்து வருகிறேன். என் ஊர் பக்கத்திலேயே வேப்பங்குடி என்று ஒரு கிராமம் உள்ளது. அங்கேதான் நான் புதியதாக ஒரு தொழிலைத் தொடங்கி இருக்கிறேன்.

அடிப்படையில் நான் பி.டெக் இஞ்ஜினியரிங் படித்திருக்கிறேன். அதைப் படிக்கும்போது நாமே சொந்தமாகத் தொழில் தொடங்கவேண்டும் என்ற திட்டத்துடன் தான் படித்தேன். அதன்பிறகு நார் தொழிற்சாலை தொடங்குவதற்காக சில கம்பெனிகளில் போய் அனுபவ ரீதியாகப் பல விசயங்களைக் கற்றுக்கொண்டேன். பிறகு தொழிற்சாலை அமைக்கலாம் என்று முடிவு எடுத்தபோது பெரிய தொகை தேவைப்பட்டது. அந்தளவுக்கு எங்கள் குடும்பத்தில் நிதி இல்லை. அப்போதுதான் வங்கிக் கடன் பெற முடிவுசெய்தோம்.

அதன்பிறகு மாவட்ட தொழில் மையத்தினை அணுகினேன். அவர்கள் தொழில் ஆரம்பிப்பதற்கான அடிப்படை வரைவுத் திட்டத்தைக் கேட்டார்கள். அதைக் கொடுத்த பிறகு வங்கியை அணுகினோம். குறைந்த 6 மாதத்தில் எனக்கு மானியத்துடன் கடன் கிடைத்துவிட்டது" என்கிறார்

இந்த இருவரின் பேச்சிலிருந்து ஒரு விசயத்தைத் தெளிவாக உணர முடிகிறது. முன்பு எல்லாம் வங்கிக் கடன் என்றால் வருடக் கணக்கில் அலைய வேண்டும். இறுதியாக ஏமாற்றமே மிஞ்சும். ஆனால், இப்போது சரியான நபர், தகுதியான நபர் என்றால் உடனடியாக தொழில் மையம் மூலம் கடன் பெற முடிகிறது என்பது தெளிவாகப் புரிகிறது. அதற்கு இந்தப் புதிய அரசு வகுத்துள்ள நெறிமுறைகள்தான் காரணம்.
இந்த 2 இளைஞர்களைப் போலவே 'தாட்கோ' மூலம் பலன் பெற்ற இன்னொருவர் இதே மாவட்டத்தில் இருக்கிறார். அவர் என்ன தொழில் செய்கிறார்?

"என் பெயர் பழனிசாமி.பொன்னமராவதி தாலுக்காவில் உள்ள ஆலவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 3.7.2003 செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கம் மூலம் கடலை எண்ணெய் தயாரிப்பதற்காக ஆலை ஒன்றை வங்கி மூலம் கடன்பெற்று நடத்தி வருகிறோம்.

இந்த மாவட்டத்தைச் சுற்றி மணிலா பயிரிடம் விவசாயிகள் அதிகம். ஆகவே அவர்களிடம் இருந்து மணிலா பயிர்களைக் கொள்முதல் செய்து, அதை எண்ணெய் ஆக ஆடி விற்பனை செய்து வருகிறோம். இது எந்தக் கலப்படமும் இல்லாத எண்ணெய். அதுவும் குறைந்தவிலையில் மக்களுக்கு விற்பனை செய்கிறோம். லாப நோக்கம் அற்ற இந்த நிறுவனம் மக்கள் நலனுக்காக மட்டுமே இயங்கி வருகிறது.

இந்த ஆலைக்கு எந்திரங்கள் வாங்குவதற்காக 8 லட்சத்து 85 ஆயிரத்து 5 ரூபாய்க் கடன் கிடைத்துள்ளது. இதில் சங்கத்தின் சொந்த நிதியாக 1 லட்சத்து 9 ஆயிரத்து 445 ரூபாய் போடப்பட்டுள்ளது. மானியமாக 35% நிதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 3 லட்சத்து 44 ஆயிரத்து 752 ரூபாய் கிடைத்துள்ளது" என்கிறார்

இது குறித்து புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யா ஐஏஎஸ், "படித்த இளைஞர்களைத் தொழிலதிபர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம். இந்தத் திட்டத்தின் நோக்கம். அதனடிப்படையில் இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 40 பேர் முதல்வரின் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர். இது போக மேலும் 18 இளைஞர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். அதில் 6 பேர் பயிற்சி காலத்தில் உள்ளனர்" என்கிறார் அவர்












Click it and Unblock the Notifications