சீமான், விஜயை பாருங்க.. திமுகவுக்கு எதிராக திரும்பும் கார்த்தி சிதம்பரம்? சலசலப்பை உருவாக்கிய பேச்சு
புதுக்கோட்டை: தேர்தலில் நம்மை பயன்படுத்தி கொள்ளும் கட்சிகள் தேர்தல் முடிந்ததும் விட்டுவிடுகிறார்கள். திமுக கூட்டணியில் இருந்தாலும் நம் கருத்துகளை ஆழமாக பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் மக்கள் நம்மை திரும்பி பார்ப்பார்கள். தமிழக இளைஞர்கள் நம் கட்சியை விட சீமான், விஜய் கட்சிக்கு செல்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை இளைஞர்களுக்கானதாக மாற்ற வேண்டும் என கார்த்தி சிதம்பரம் பரபரப்பாக பேசியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவர் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பியாக உள்ளார். இந்நிலையில் தான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் பணி என்பது தொடங்கி உள்ளது.

அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவும் அவர்களின் கருத்துக்களை கேட்கவும் மாவட்டம் தோறும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். இதில் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் பேசியது சலசலப்பை ஏற்டுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது: ''தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளால் தான் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. அதனால், நம் கட்சியில் பலம் இல்லை என்று கூறவில்லை.
தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று சிறுபான்மையின மக்கள் விரும்பினார்கள். அதனால் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தார்கள். தமிழ்நாட்டில் ஒரு நேரத்தில் காங்கிரஸ் கட்சி முதலிடத்தில் இருந்தது. தற்போது 3வது இடத்தில் இருப்பதாக சொல்லி கொள்கிறோம்.
கட்சியில் எம்பிகளை மட்டுமே வைத்துக் கொண்டு கட்சி வளர்ந்துவிட முடியாது. உள்ளாட்சி தேர்தல்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள், எம்எல்ஏகள் அதிக அளவில் இருந்தால் தான் கட்சி வளரும். வளர்க்க முடியும். தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த கட்சி (திமுக) தற்போது ஆட்சியில் இருக்கிறது. ஆனால் ஆட்சியில் காங்கிரசுக்கு இடம்பெற முடியவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
தேர்தலில் நம்மை பயன்படுத்தி கொள்ளும் கட்சிகள் தேர்தல் முடிந்ததும் விட்டுவிடுகிறார்கள். கூட்டணி கட்சிகள் நம்மை கண்டுகொள்ளவில்லை என கட்சியினர் சங்கடப்படுகிறார்கள்.இளைஞர்கள் நம் கட்சியைவிட சீமான், விஜய் கட்சிக்கு செல்கிறார்கள். மக்களின் கவனத்தை இளைஞர்களின் கவனத்தை ஈர்க்க இன்று பல கட்சிகள் வந்துவிட்டது. அதனால் காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களுக்கான மாற்றம் வேண்டும்
மேலும் திமுகவோடு கூட்டணி வைத்திருக்கும் விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் மக்களின் தேவை, பிரச்சனைகளை பற்றி அறிந்து அவர்களுக்காக பேசி தங்கள் கட்சியின் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறார்கள். அதேபோல, நம்முடைய கருத்தை ஆழமாக பதிவு செய்தால்தான் மக்கள் நம்மை திரும்பிப் பார்ப்பார்கள். மக்கள் மனதில் நாம் இடம்பிடிக்க வேண்டும். அதற்கு நாம் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகள், உரிமைகளுக்காக பேச வேண்டும்'' என்றார். இந்த பேச்சு தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications