கடும் பசியுடன் டிபன் சாப்பிட உட்கார்ந்த கணவன்.. கிச்சடியில் உப்பு அதிகமானதால் ஆத்திரம்.. மனைவி கொலை
புனே: மகாராஷ்டிராவில் கிச்சடியில் உப்பு அதிகமாக போட்டதால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் தானே பகுதியில் பயன்தார் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் நீலேஷ் காக் (46). இவரது மனைவி நிர்மலா. சம்பவத்தன்று காலை உணவு சாப்பிடுவதற்காக நீலேஷ் டைனிங் டேபிளில் அமர்ந்தார்.
அப்போது நிர்மலா தான் சமைத்த கிச்சடியை நீலேஷுக்கு பரிமாறினார். பசி வயிற்றை கிள்ளியதால் ஒரு பெரிய உருண்டையாக எடுத்து கிச்சடியை சாப்பிட்டார்.

உப்பு
வாயில் உணவை வைத்தவுடன் ஒரே உப்பு கரித்தது. மீண்டும் ஒரு சிறிய அளவிலான உணவை சுவைத்தார். அப்போதும் உப்பு கரித்தது. இதனால் ஆத்திரமடைந்த நீலேஷ், ஒரு கிச்சடியை கூட ஒழுங்காக செய்ய தெரியாதா? தினமும் சமைக்கும் உணவில் இத்தனை கவனக்குறைவா?

பசி
பசி வயிற்றை கிள்ளுகிறது. இந்த நேரம் பார்த்து இப்படி சொதப்பி வைத்துவிட்டாயே! உன்னால் முடியாவிட்டால் என்னிடம் சொல்லியிருந்தால் கடையிலிருந்து வாங்கியாவது சாப்பிட்டிருப்பேனே என கடுமையக திட்டியுள்ளார் நீலேஷ்.

ஆத்திரமடைந்த நிர்மலா
இதனால் ஆத்திரமடைந்த நிர்மலாவும் ஏதோ ஒரு நாள் கைத்தவறி சற்று கூடுதலாக உப்பை போட்டுவிட்டேன். இது குற்றமா? கொஞ்சம் பொறுங்கள் நான் வேறு உணவை சமைக்கிறேன் என நிர்மலா கூறியுள்ளதாக தெரிகிறது. இது நீலேஷுக்கு மீண்டும் ஆத்திரத்தை மூட்டியது.

கொலை செய்த நீலேஷ்
உடனே ஒரு துணியை கொண்டு நிர்மலாவின் கழுத்தை நெரித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து நிர்மலா உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நீலேஷ் தப்பியோட முயற்சித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை பிடித்து போலீஸில் பிடித்து கொடுத்தனர். நிர்மலாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மருமகள்
இது போன்று கடந்த வியாழக்கிழமை ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே பகுதியில் ரபோடியை சேர்ந்தவர் காஷிநாத் பாண்டுரங்க பாட்டீல் (76). இவரது மருமகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காலை 11.30 மணி ஆகியும் காலை உணவையும் டீயையும் கொடுக்கவில்லை என தெரிகிறது.

பாட்டீல் கைது
இதனால் ஆத்திரமடைந்த பாட்டீல் தனது துப்பாக்கியை எடுத்து மருமகளை சுட்டுள்ளார். இதையடுத்து காயமடைந்த மருமகளை வீட்டிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பாட்டீல் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications