ரூ 37 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக அப்பாவியை கொன்ற முதியவர் கைது.. பாம்பை ஏவி கொன்றது அம்பலம்
புனே: 5 மில்லியன் அமெரிக்க டாலர் இன்சூரன்ஸ் பணத்திற்காக மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை கொன்றுவிட்டு தானே இறந்ததாக நாடகமாடிய 54 வயது முதியவரை போலீஸார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் பிரபாகர் வக்சோரே. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
அப்போது அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தில் 5 மில்லியன் டாலருக்கு (இந்தி மதிப்பில் சுமார் ரூ 37.45 கோடி) இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் குடும்பத்தினருடன் பிரபாகர் இந்தியாவுக்கு வந்தார்.

மாமனார் வீட்டில்
அங்கு அகமதாபாத் மாவட்டத்தில் தாமாங்குவான் பாட் என்ற இடத்தில் தனது மாமனார்- மாமியாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தான் உயிருடன் இருக்கும் போதே இன்சூரன்ஸ் பணத்தை அனுபவிக்க பிரபாகர் எண்ணினார். இதற்காக இவர் ரஜுர் கிராமத்தில் வாடகைக்கு தங்கியிருந்தார்.

இன்சூரன்ஸ் பணம்
அங்கு சந்தீப் தாலேகர், ஹர்ஷத் லஹாமகே, ஹரீஷ் குலால் மற்றும் பிரசாந்த் சவுத்ரி ஆகியோரை பிரபாகர் அணுகி விஷயத்தை சொன்னார். தனக்கு பதிலாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை கொன்று அதை தன்னை போல் சித்தரித்து அமெரிக்காவிலிருந்து இன்சூரன்ஸ் பணம் வந்தவுடன் செய்த வேலைக்கு பணம் கொடுப்பதாக வாக்களித்தார்.

உரிமை
மனநலம் பாதித்த ஒருவரை கொன்றால்தான் அவருக்கென உறவினர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், இறந்தவரை உரிமை கோர மாட்டார்கள் என்பதால் மனநலம் பாதித்த ஒருவரை தேர்வு செய்தனர். பின்னர் விஷம் கொண்ட பாம்பை ஏவிவிட்டு அந்த மனநலம் பாதித்தவரை கடிக்க வைத்து விட்டு சந்தீப் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

4 பேரும் உறவினர்கள்
அப்போது அந்த மனநலம் பாதித்தவரின் பெயர் பிரபாகர் என கூறிய 4 பேரும் அவர்கள் , பிரபாகருக்கு உறவினர்கள் என தெரிவித்தனர். அந்த நபர் அமெரிக்காவிலிருந்து வந்தவர் என்றும் தங்களுடன் இந்த கிராமத்தில் தங்கியிருந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் கொல்லப்பட்ட மனநலம் பாதித்தவர்தான் பிரபாகர் என்ற பெயரில் இறப்புச் சான்றிதழையும் வாங்கிக் கொண்டனர்.

அமெரிக்கா நிறுவனம்
இதையடுத்து இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பிரபாகரின் மகன் அமெரிக்கா இன்சூரன்ஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். இதனிடையே பிரபாகருக்கு இறுதிச் சடங்குகளை செய்தனர். ஆனால் இன்சூரன்ஸ் பணத்தை வாங்க ஏற்கெனவே பிரபாகர் நாடகமாடியதாக இந்த முறையும் ஏதாவது சதியாக இருக்கலாம் என அமெரிக்க நிறுவனத்திற்கு சந்தேகம் வலுத்தது.

அதிகாரிகள்
இதையடுத்து விசாரணை அதிகாரிகளை இந்தியாவுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டதில் பிரபாகர் உயிருடன் இருப்பதும், இன்சூரன்ஸ் பணத்திற்காக மனநலம் பாதித்த ஒருவரை கொன்றுவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து உள்ளூர் போலீஸாருடன் முயற்சி எடுத்து வதோதராவில் இருந்த பிரபாகரை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு உதவிய சந்தீப் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். செந்தில் - கவுண்டமணி காமெடியில் இப்படித்தான் செந்திலுக்கு கிடைக்கும் இன்சூரன்ஸ் பணத்திற்காக செந்தில் இறந்ததாக இருவரும் பேசி வைத்துக் கொண்டு சொந்தகாரர்களிடம் செந்தில் இறந்துவிட்டதாக கூற கடைசியில் சுடுகாட்டுக்கு இன்சூரன்ஸ் அதிகாரிகள் வந்து எரித்தால்தான் பணம் கொடுப்போம் என கவுண்டமணியிடம் சொல்ல அலறி அடித்து கொண்டு செந்தில் ஓட செம காமெடியாக இருக்கும். ஆனால் புணே விவகாரத்தில் ஒருவரை கொலையே செய்து இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஏமாற்ற பார்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications