போர்ஷே காரால் மோதி 2 பேரை கொன்ற 17 வயசு சிறுவன் கேஸ் ஞாபகம் இருக்கா.. பாய்ந்தது புல்டோசர் ஆக்ஷன்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள மஹாபலேஷ்வரில் உள்ள ரிசார்ட்டில் இருந்த சட்டவிரோத கட்டிடங்களை அதிகாரிகள் இன்று இடித்து அகற்றியுள்ளனர். இந்த ரிசார்ட் புனேயில் நடைபெற்ற போர்ஷே கார் விபத்தில் சிக்கியதாக கூறப்படும் 17 வயது சிறுவனின் குடும்பத்திற்கு சொந்தமானது. உத்தர பிரதேச யோகி ஆட்சி பாணியில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மகாராஷ்டிராவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ரிசார்ட் சட்டவிரோதமானது என கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்குமாறு சதாரா ஆட்சியர் ஜிதேந்திர துடிக்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டதைத் தொடர்ந்து இடிக்கப்பட்டதாம். போன வாரமே இந்த ரிசார்ட்டுக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐடி பெண் ஊழியர்கள் இருவர், மே 19 அன்று புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியில் போதையில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற விலை உயர்ந்த போர்ஷே காரால் மோதி தூக்கி வீசப்பட்டு கொல்லப்பட்டனர். இதையடுத்து சிறுவனுக்கு விஐபி மாதிரி போலீசார் கவனிப்பு சலுகைகள் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஊடகங்கள் இந்த விஷயத்தை அடுத்தடுத்து செய்தியாக்கிய பிறகு, சிறுவனின் தந்தை மற்றும் தாத்தா கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் தாத்தா, விபத்துக்கான பொறுப்பை ஏற்கும்படி தனது கார் டிரைவரை வலியுறுத்தியுள்ளார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். சிறுவன் மது அருந்தியிருந்ததை கண்டுபிடிக்க சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை மாற்றம் செய்த அவரது தந்தை மற்றும் தாயாரும் தற்போது, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதனிடையே இந்த ரிசார்ட் கட்டிடம் இன்று இடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத கட்டுமானங்கள் மீது முதல்வர் ஷிண்டே கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக போர்ஷே வழக்கில் தொடர்புள்ளோரும் சிக்கியுள்ளனர்.
விஐபி சர்ச்சை ரீவைண்ட்: முன்னதாக விபத்து நடந்ததும் சிறுவனுக்கு போலீஸ் விஐபி ட்ரீட்மென்ட் தந்த குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவ இடத்திற்கு கிரைம் நிருபர்கள் சென்றபோது, சிறுவனை போலீஸ் ஏசிபி நாற்காலியில் போலீசார் அமர்த்தி பீட்சா வாங்கி கொடுத்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்தனர்.
உள்ளூர் எம்.எல்.ஏ ஒருவர் அதிகாலை 3 மணியளவில் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். ஆனால் குற்றத்தின் தீவிரத்தை உணர்ந்து அங்கிருந்து போய்விட்டாராம். சட்டத்தின் பிடியிலிருந்து சிறுவனை காப்பாற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆல்கஹால் சோதனைகள் மற்றும் நடத்தை மதிப்பீடுகளை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் மே 19 அன்று காலை 9 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு 11 மணியளவில் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, இது சந்தேகத்தை எழுப்பியது.
சிறுவனின் தந்தை மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தடயவியல் தலைவர் டாக்டர் அஜய் தாவ்டே, சிறுவனிந் தந்தையுடன் 14 முறை செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. 50 லட்சம் மதிப்பிலான பேரம் நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. டாக்டர். தாவ்டே, சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்றுமாறு தலைமை மருத்துவ அதிகாரி ஸ்ரீஹரிக்கு அறிவுறுத்தினாராம். ஊடகங்கள் தலையீட்டால் அனைத்து உண்மையும் வெளியே வந்தது. உயர் அதிகாரிகள் மீண்டும் சிறுவனின் ரத்த மாதிரிகளை சேகரித்து மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவன் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிபதி எல்.என்.தன்வாடே ஜாமீன் வழங்கி, சாலை விபத்துகள் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரை எழுதவும், 15 நாட்கள் போக்குவரத்து போலீஸாருடன் பணியாற்றவும் உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்து கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து, மே 22 அன்று, சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது, மேலும் அவர் கண்காணிப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டார். சிறுவனின் பெற்றோர் இந்த பழியை தூக்கி தங்கள் டிரைவர் மீது போட முயன்றனர். ஆனால் கார் டிரைவருக்கு விபத்தில் தொடர்பு இல்லை என போலீசார் நிரூபித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications