சக காவலர்கள் பாலியல் தொல்லை.. திருநங்கை போலீஸ் அதிகாரி நஸ்ரியா தற்கொலை முயற்சி!
இராமநாதபுரத்தில் திருநங்கை போலீஸ் அதிகாரி நஸ்ரியா தற்கொலை முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது.
Recommended Video
இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் திருநங்கை போலீஸ் அதிகாரி நஸ்ரியா தற்கொலை முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் நஸ்ரியா. திருநங்கையான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் இராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியில் சேர்ந்தார். ஆயுதப்படை குடியிருப்பில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், பணியின் போது இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயசீலன், தலைமை எழுத்தாளர் பார்த்திபன் ஆகியோர் அவரின் நடத்தை குறித்து தகாத வார்த்தைகளால் பேசி வந்துள்ளனர். நஸ்ரியாவிற்கு பாலியல் ரீதியாக தொல்லையும் கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து பாலியல் தொல்லைகளால் நஸ்ரியா கஷ்டப்பட்டு வந்து இருக்கிறார். இதனால் மனமுடைந்த அவர் எனது சாவிற்கு இவர்கள் 3 பேரும் தான் காரணம் எனக் கூறி எலி கொல்லி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். விஷம் குடித்த சில நிமிடத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
சக போலீசார் அவரை வேகமாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவருக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாலியல் பிரச்சனைகள் காரணமாக இவர் கடந்த மூன்று வாரமாக போலீஸ் நிலையத்திற்கு செல்லவில்லை. இதனால், கடந்த 3 வாரங்களுக்கு மேலாக இவர் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் விடுப்பு எடுத்துள்ளார் என்று இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வருகிறது.
அவரது நடத்தை குறித்து யாரும் விமர்சிக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.