முன்னோர்களுக்கு தர்ப்பணம்... ஆடி அமாவாசையையொட்டி புனித நீர்நிலைகளில் வழிபாடு
ராமேஸ்வரம்: ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில், ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம், பல காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு முறையாகும். நாம் வணங்கி வழிபடும் தெய்வத்தை பார்க்க முடிவதில்லை. ஆனால் நம்மை பெற்றவர்களையும் அவர்களைப் பெற்ற நமது தாத்தா-பாட்டிகளை பார்த்திருப்போம்.

இப்படி உறவாலும் உதிரத்தாலும் நம்மோடு சம்பந்தப்பட்ட, அவர்களது அனுபவங்களை ஆதாரமாகக் கொண்டு வாழ்வதற்கு நன்றி கூறுவதே முன்னோர் வழிபாடாகும். இந்த வழிபாட்டுக்குரிய நாளே, அமாவாசை. முன்னோர்கள் நினைவாக ஆடி அமாவாசை தினத்தன்று திதி தர்ப்பணம் செய்தால், இறந்தவர்கள் மோட்சம் அடைவார்கள் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அதன்படி, ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்தனர். அதிகாலையில் அக்னிதீர்த்தக் கடலில் பித்ருக்களுக்கு பிண்டம், எள் வைத்து முன்னோர்களுக்கு பூஜை செய்தனர்.
இதேபோல், முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள திரிவேணி சங்கமத்தில் அதிகாலை முதல் நூற்றுக்கணக்கானோர் நீராடிவிட்டு, மறைந்த தங்கள் மூதாதையர்களுக்கு வேத விற்பன்னர்கள் மூலம் பலி கர்மம் செய்தனர். முன்னோர்களின் ஆன்மா சாந்தி பெற வேண்டி பகவதி அம்மன் கோவிலில் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன், ஓடத்துறை உள்ளிட்ட காவிரிப் படித்துறைகளில் ஆடி அமாவாசை முன்னிட்டு தங்கள் முன்னோர்களை நினைத்து திதி கொடுக்க ஏராளமானோர் இன்று திரண்டனர். தூத்துக்குடி புதிய துறைமுகம் மற்றும் திரேஸ்புரம் ஆகிய கடற்கரை பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் கடலில் நீராடியபின், எள் மற்றும் தண்ணீரை கொண்டு தர்ப்பணம் செய்தனர். இதேபோன்று, வேதாரண்யம், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளிலும் ஏராளமான பக்தர்கள், ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications