செப்பல்தானே போடலை! பணமோசடி செய்துட்டு ஜெயிலுக்கா போயிருந்தேன்?செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை பதில்
ராமநாதபுரம்: நான் செப்பல் போடாமல்தான் இருக்கிறேன், வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிவிட்டு மோசடி செய்து ஜெயிலுக்கெல்லாம் போகவில்லையே என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: நான் செப்பல் போடாமல்தான் இருக்கிறேன். வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிவிட்டு யாரையும் மோசடி செய்து ஜெயிலுக்கு செல்லவில்லையே...

ஜெயிலுக்கு செல்வதும், மீண்டும் அமைச்சர் பதவியில் அமருவதுதான் தவறு. இது குறித்து உச்சநீதிமன்றமே கேள்வி எழுப்பியது. மேடை போட்டு பாஜகவை திட்டுவதுதான் திமுகவின் முழு நேர வேலையாக இருக்கிறது.
அனைத்து கட்சி கூட்டம் எதற்கு? ஏன் என்றே தெரியாமலேயே எப்படி பங்கேற்க முடியும்? தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தில் ஒரு தொகுதி கூட குறையாது. இதில் கூட திமுக அரசியல் செய்கிறது. திமுகவினருக்கு மக்கள் பிரச்சினை குறித்து எந்த கவலையும் இல்லை. மீனவர் பிரச்சினையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இலங்கையில் புதிய அதிபர் வந்த பிறகுதான் கைது நடவடிக்கை அதிகமாகியுள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் பெரியார் தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கோவை எப்போதுமே பெரியார் மண், திராவிட மண் என்பதை மக்கள் நிரூபித்துள்ளார்கள்.
கோவையில் ஒரு சட்டமன்றத் தேர்தலில் வென்றுவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெல்லலாம் என நினைத்தார்கள். ஆனால் சட்டசபை தேர்தலில் உள்ளூரிலேயே விலை போகாத ஒரு ஆடு, நாடாளுமன்றத் தேர்தலில் வெளியூர் சந்தைக்கு வந்து விலை போகுமா என வந்தார்கள். தம்பி. இந்த ஊரும் பெரியார் மண்தான். உங்களுக்கு அங்கேயும் வேலையில்லை, இங்கேயும் வேலையில்லை.
தமிழகத்தில் இனி எங்கேயும் வேலையில்லை என கூறிவிட்டனர். உலகத்திலேயே தான்தான் அறிவாளி என நினைத்துக் கொண்டு தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டு ஊர் மக்கள் நாட்டு மக்கள் அடிப்பதற்கு முன் நானே என்னை அடித்து கொள்கிறேன் என வீடியோ எடுத்து வெளியிட்டார். சாட்டையால் அடித்ததோடு மட்டுமல்லாமல் செருப்பு போட மாட்டேன் என சவால் விட்டார்.
தமிழகத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது. இனி வாழ்நாள் முழுக்க உங்களால் செருப்பே போட முடியாது. கொஞ்சம் யோசித்து சபதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜிக்கு ஆரம்பத்திலிருந்தே மோதல் போக்கு இருந்து வந்தது. இருவரும் ஒவ்வொரு முறையும் ஒருவரை ஒருவர் விமர்சித்து கொண்டிருந்தனர். செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் சிறையில் இருந்த நிலையில் தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அமைச்சராகியுள்ளார். தற்போது மீண்டும் இந்த மோதல் போக்கு தொடங்கிவிட்டது.












Click it and Unblock the Notifications