சுறுசுறுப்பாக நடக்க சுடச்சுட போண்டா.. ஸ்ட்ராங்கா ஒரு டீ! மாலை ஸ்நாக்ஸ் ரெடி! அண்ணாமலை பாதயாத்திரை!
ராமநாதபுரம்: என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பாதயாத்திரை தொடங்கும் நிலையில், அதில் பங்கேற்கும் கட்சிக்காரர்களுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக சுடச்சுட வடை, போன்டா, தேநீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
கூடவே ஆளுக்கு ஒரு தண்ணீர் பாட்டில் கேட்கக் கேட்க இல்லையென்று சொல்லாமல் கொடுக்கப்படுகின்றன. ராமநாதபுரத்தில் இன்று நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை வரும் ஜனவரி இரண்டாவது வாரம் சென்னையில் நிறைவு செய்கிறார்.

அதேபோல் மூன்று வேளையும் பாதயாத்திரையில் பங்கேற்கும் பாஜகவினருக்கு அறுசுவை உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காகும் செலவுகளே பல 'சி' க்களை தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 168 நாட்கள் அண்ணாமலை மேற்கொள்ளும் இந்த நடைபயணம் மூலம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறது பாஜக தலைமை. முதலில் குறிப்பிட்ட சில ஊர்களில் மட்டுமே அண்ணாமலை நடைபயணத்தில் கலந்துகொள்ளும் வகையிலும் மற்ற இடங்களில் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது.
பாஜக தேசியத் தலைமை என்ன நினைத்ததோ தெரியவில்லை, முழு நடைபயணத்திலும் அண்ணாமலையை பங்கேற்க வைத்திருக்கிறது. எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக இருந்தபோது அவர் மேற்கொண்ட 'வேல் யாத்திரை' இன்றளவும் பேசக்கூடிய வகையில் அப்போது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கிடைக்கவும் அந்த யாத்திரை அடித்தளம் அமைத்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications