அண்ணாமலையின் ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை! கருப்பு சிவப்பு பையை திறந்து பார்த்த அதிகாரிகள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதாக பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் அடுத்த வாரம் அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

இதனால் யாரும் எந்த வித ஆவணங்களும் இன்றி ரூ 50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்லக் கூடாது என்பது தேர்தல் நடத்தையில் ஒன்றாகும். இது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்ப்பதற்காக கொண்டு வந்த விதியாகும்.
ரூ 50 ஆயிரத்திற்குள் பணம் கொண்டு செல்லலாம். அதற்கு மேல் கொண்டு போய் ஆவணங்கள் இல்லாவிட்டால் அது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும். ஒரு வேளை ரூ 10 லட்சத்திற்கு மேல் யாராவது பணம் கொண்டு சென்றால் அந்த வழக்கை வருமான வரித் துறை விசாரிக்கும்.
இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் சரியாக 6 நாட்கள்தான் இருப்பதால் எப்படியும் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கக் கூடும் என்பதால் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோரின் வாகனங்களை சோதனையிட்டு வருகிறார்கள் பறக்கும் படையினர்.
இதற்காக தமிழகத்தில் 900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் பணியே ஆவணங்களின்றி அதிக அளவு பணம், பரிசுபொருள்கள் உள்ளிட்டவை கொண்டு சென்றால் பறிமுதல் செய்வதுதான். அந்த வகையில் இதுவரை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்பி கனிமொழி, முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் உள்ளிட்டோரின் கார்களை பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அது போல் நேற்றைய தினம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரையும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் தேனியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது அதிமுக ஒரு நாள் தினகரன் வசம் வரும் என பேசி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து அதிமுக உரிமை மீட்பு குழுவை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரித்து ராமநாதபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய அண்ணாமலை ஹெலிகாப்டரில் வந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஹெலிகாப்டரின் உள்ளே, அண்ணாமலை அமர்ந்திருந்த இருக்கை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்யப்பட்டது. அங்கிருந்த கருப்பு சிவப்பு நிற பையையும் சோதனையிட்டனர். அதில் காலி வாட்டர் பாட்டில் உள்ளிட்டவை இருந்தன.
இதையடுத்து பறக்கும் படையினர் அங்கிருந்து சென்று விட்டனர். மேலும் அண்ணாமலையும், ஓபிஎஸ்ஸுக்கு பிரச்சாரம் செய்ய அரண்மனை பகுதிக்கு சென்றுவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications