அதிமுகவில் பரபரப்பு! தலைவா! என்னால் விலகியிருக்க முடியவில்லை! அன்வர் ராஜா ஒட்டிய போஸ்டர்!
ராமநாதபுரம்: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள அன்வர் ராஜா, மறைந்த எம்.ஜி.ஆரிடம் நீதி கேட்பது போல் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஒரு சுவரொட்டியை ஒட்டியிருக்கிறார்.
Recommended Video
கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை இன்னும் தன்னால் ஜீரணிக்கமுடியவில்லை என்று அந்த போஸ்டர் மூலம் சூசகமாக அதிமுக தலைமைக்கு அன்வர் ராஜா உணர்த்த முயற்சித்திருக்கிறார்.
ஜெயலலிதா உள்ளிட்ட யார் படமும் இடம்பெறாத அந்த போஸ்டரில் எம்.ஜி.ஆர். ஒருவருடைய படம் மட்டுமே அச்சிடப்பட்டிருக்கிறது.

அதிமுக சீனியர்
அதிமுகவில் சீனியர் நிர்வாகியாக வலம் வந்த அன்வர் ராஜா கடந்த மாதம் இறுதியில் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். அப்போது முதலே மனம் நொந்த நிலையில் யாருடனுடம் பேசாமல் ஆழ்ந்த அமைதி காத்து வந்த அன்வர் ராஜா, இப்போது தனது மவுனத்தை மெல்ல கலைக்கத் தொடங்கியிருக்கிறார். அந்த வகையில் எம்.ஜி.ஆரின் 34-வது நினைவு நாளான இன்று, அவரிடம் நீதி கேட்பது போல் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒன்றை ஒட்டியிருக்கிறார் அன்வர் ராஜா.

தலைவா!
அந்த போஸ்டரில், தலைவா! என்னால் விலகியிருக்க முடியவில்லை. ஏனெனில்... நான், தினமும் உன்னை நினைக்கிறேன்... அதில்.. நான், என்னை மறக்கின்றேன்.. என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், அன்வர் ராஜா அதிமுகவிலேயே இல்லாத போதும் தனது பெயரை சிவப்பு -கருப்பு -வெள்ளை என்ற அதிமுக கொடி வண்ணத்திலேயே அச்சிட்டிருக்கிறார். இதுமட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் என்று மட்டும் போஸ்டரில் தனது பெயருக்கு கீழ் குறிப்பிட்டுள்ளார்.

பரபரப்பு போஸ்டர்
எம்.ஜி.ஆர். நினைவுநாளான இன்று ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் மூலம், கட்சி செயல்பாடுகளில் இருந்து தன்னால் விலகியிருக்க முடியவில்லை என்பதை அதிமுக தலைமையின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார் அன்வர் ராஜா. ஏற்கனவே இவரை மீண்டும் கட்சியில் சேர்க்க ஓ.பி.எஸ். பரிவு காட்டி வரும் வேளையில், அன்வர் ராஜா ஒட்டியுள்ள இந்த போஸ்டருக்கு என்ன ரியாக்ஷன் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிமுகவில் பயணம்
திமுகவில் இருந்து அன்வர் ராஜாவுக்கு அழைப்பு வரும் நிலையில், தமது பயணம் அதிமுகவை அடியொற்றியே இருக்கும் என்பதையும் இந்த சுவரொட்டி மூலம் பதிலாக தெரிவித்திருக்கிறார் அன்வர் ராஜா. எம்.ஜி.ஆரால் அதிமுக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் அன்வர் ராஜா என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மொத்தம் 15 உறுப்பினர்கள் கொண்ட அதிமுக ஆட்சி மன்றக் குழுவில் 13 பேர் அமைச்சர்கள் ஒருவர் எம்.பி.(ஜெயலலிதா) 15 வது நபராக சாதாரண ஒன்றியச் சேர்மனாக இருந்த அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கியிருந்தார் எம்.ஜி.ஆர் என்பது திரும்பிப் பார்க்கத்தக்கது.












Click it and Unblock the Notifications