ராமேஸ்வரம் அருகே பார்க்கத்தான் அலுமினியம்.. ஆனால் எல்லாமே தங்க கட்டிகள்... மதிப்பு பல கோடி
ராமநாதபுரம்: இலங்கை தலைமன்னார் பகுதியில் நேற்று இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மிதவை போன்ற சிறிய படகு ஒன்றில் 2 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தார்கள். அவர்களின் படகை வழிமறித்து இலங்கை கடற்படையினர் விசாரணை செய்தனர். அந்த சிறிய படகில் ஏறி இலங்கை கடற்படையினர் சோதனை செய்தபோது, அலுமினிய முலாம் பூசப்பட்ட உலோக குண்டுகள் அதிக எண்ணிக்கையில் சிக்கின. அவை அனைத்தும் தங்கம் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். அங்கு 8.5 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கூப்பிடும் தூரத்தில் தான் இலங்கை இருக்கிறது. இலங்கையின் தலைமன்னாரில் இருந்து மின்னல் வேகத்தில் செல்ல படகில் சென்றால், சில நிமிடங்களிலேயே ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடிக்கு போய்விட முடியும். அந்த அளவிற்கு தனுஷ்கோடியும் தலைமன்னாரும் பக்கம் பக்கம் ஆகும். இரு பக்கமுமே உள்ளவர்கள் தமிழர்கள் என்பதால், யார் எங்கிருந்து என்ன கொண்டு செல்கிறார்கள் என்பதை படகை வைத்துதான் அடையாளம் காண முடியும்.

எனினும் ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக கஞ்சா, கடல் அட்டை, பீடி இலை, பீடி பண்டல், ஹெராயின், மஞ்சள், ஏலக்காய் மற்றும் மருந்து பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை கடத்திச் செல்வது அதிகமாக நடப்பதாக கூறப்படுகிறது . அதேபோல் இலங்கையில் இருந்து கடத்தல்காரர்கள் தங்கக்கட்டிகளை கடத்தி வருவதும் அவ்வப்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இலங்கை தலைமன்னார் பகுதியில் நேற்று இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது, மிதவை போன்ற சிறிய படகு ஒன்றில் 2 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் மீது சந்தேகம் அடைந்த இலங்கை கடற்படையினர் அந்த 2 பேரையும் பிடித்து தீவிரமாக விசாரணை செய்தனர். மீன் பிடி படகையும், அவர்களின் பேச்சுக்களையும் பார்த்த இலங்கை கடற்படைக்கு சந்தேகம் வந்தது. இதனால் கடற்படையினர் சிறிய படகில் ஏறி சோதனை செய்தபோது, அலுமினிய முலாம் பூசப்பட்ட உலோக குண்டுகள் அதிக எண்ணிக்கையில் இருந்தது.
அது என்ன உலோகம் என்று சோதித்த இலங்கை கடற்படையினருக்கு ட்விஸ்ட் காத்திருந்தது. அவை அனைத்தும் தங்கக்கட்டிகள் என்பதும், அலுமினிய முலாம் பூசி பதுக்கி வைத்திருந்ததும், இதனை ராமேசுவரத்துக்கு கடத்த முயன்றதையும் கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து அந்த இருவரையும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளையும் யாழ்ப்பாணத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்துக்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். அங்கு எடை போட்டு பார்த்ததில் மொத்தம் 8.5 கிலோ தங்கம் பிடிபட்டது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 2 பேரின் செல்போன்களிலும் தமிழகத்தை சேர்ந்த சிலரது செல்போன் எண்கள் இருந்தன. இந்த தங்கக்கட்டிகளை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த யாருக்கு கடத்தி கொண்டு வர இருந்தார்கள்? என்பது குறித்து இலங்கை கடற்படையினரும், இலங்கை உளவுப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படை கைப்பற்றிய தங்கக்கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ.8 கோடி என கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் ராமேசுவரம் மத்திய-மாநில உளவு பிரிவு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications