மலேசியா பாண்டியன்.. இப்படி ஒரு எம்எல்ஏ இருக்காரா.. முதல்வருக்கு ஆஹோ ஓஹோ பாராட்டு!!
Recommended Video
ராமநாதபுரம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தமிழகத்தில் சிறப்பாக செயல்படுவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான மலேசியா பாண்டியனின் இந்தப் பேச்சு உள்ளூர் காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாள்தோறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிடும் நிலையில் அந்தக் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரே இப்படி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியா பாண்டியன்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மலேசியா பாண்டியன். மொத்தமுள்ள 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஊடகங்களுக்கு பரிச்சயம் இல்லாதவர் இந்த மலேசியா பாண்டியன். சென்னையில் இருந்தாலும், ஊரில் இருந்தாலும் பேட்டி அது இது என தன் மீது ஊடக வெளிச்சம் படாமல் பார்த்துக்கொள்வார்.

எடப்பாடிக்கு பாராட்டு
பரமக்குடியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட மலேசியாபாண்டியன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை புரிவதாக பாராட்டு பத்திரம் வாசித்தார். இவரது பேச்சு மேடையில் இருந்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தளவுக்கு முதல்வரையும், தமிழக அரசையும் போற்றினார் மலேசியா பாண்டியப் எம்.எல்.ஏ.

எனது கடமை
மாற்றுக்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் இந்த அரசு வேறுபாடு பார்க்காமல் நல்லது செய்வதாக பேசிய மலேசியாபாண்டியன், சிறந்த ஆட்சியை பாராட்ட வேண்டியது ஒவ்வொருவருடைய கடமை எனவும் கூறினார்.

பதில்
இதனிடையே எம்.எல்.ஏ. மலேசியாபாண்டியன் பேச்சு குறித்து சத்தியமூர்த்தி பவனுக்கு புகார்களை தட்டினர் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள். நிமிடத்துக்கு நிமிடம் எம்.எல்.ஏ.க்கள் அணி தாவுவதால், இப்போது இருக்கும் சூழலில் யாரையும் அழைத்து கண்டிக்க முடியாத அவலம் உள்ளதாக புகார் அனுப்பியவர்களுக்கு பதில் வந்ததாம்.












Click it and Unblock the Notifications