ஓபிஎஸ்ஸுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு.. ராமநாதபுரத்தில் மேலும் 3 பேரை களமிறக்கிய எடப்பாடி பழனிசாமி!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக ஸ்பெஷல் கவனிப்பை மேற்கொண்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாம்பழம் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அதிமுக தொண்டர்கள் தனது பக்கம் இருப்பதாக கூறி வரும் ஓபிஎஸ், அதை நிரூபிப்பதற்காக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதாக கூறியுள்ளார்.

அதேசமயம் ஓ. பன்னீர்செல்வம் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு வியூகங்களை வகுத்து, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் ஓ. பன்னீர்செல்வத்தை தோற்கடிப்பதற்காக ராமநாதபுரம் தொகுதியில் மட்டும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களின் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து, அவர்கள் தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், கூடுதலாக சில தொகுதிகளுக்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் எம்பி எம்.எஸ்.நிறைகுளத்தான், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி நேற்று முன்தினம் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எஸ்.எம்.சாமிநாதன் ஆகிய 3 பேரை கூடுதலாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஆறு சுயேட்சை வேட்பாளர்கள் ராமநாதபுரத்தில் போட்டியிடுகின்றனர். ஓபிஎஸ்ஸை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே, அதிமுக தரப்பு, அதே பெயரில் பலரை களமிறக்கி உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் வெற்றி பெறாமல் இருக்க நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு, திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர், ராஜமாணிக்கம் ஆகியோர் கூடுதலாக அதிமுக சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வடசென்னை தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசனை நியமித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications