உணவு பாதுகாப்பு அதிகாரியை காவு வாங்கிய தர்பூசணி பழம்.. அறிய வேண்டிய உண்மை.. அதிகாரி விளக்கம்
ராமநாதபுரம்: தமிழகத்தில் தர்பூசணி பழம் செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 8 முதல் 10 மெட்ரிக் டன் மகசூல் கிடைக்கும். நல்ல மகசூல் வந்தபோதிலும், ஒரே ஒரு வதந்தியால் தர்பூசணி பழத்தின் விற்பனை கடுமையாக சரிந்தது. இது தொடர்பான சர்ச்சையால் சென்னையில் உணவு பாதுகாப்பு அதிகாரியே இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் தர்பூசணி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் அதிக அளவு தர்பூசணி பழம் விற்பனையாகும்.. மக்கள் மாம்பழம் போலவே தர்பூசணி பழத்தை அதிகமாக வாங்குவார்கள். நீர் சத்து குறைப்பாட்டை போக்கும் தர்பூசணி வெயிலில் வெளியில் சென்று வரும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. தர்பூசணி பழத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

சராசரியாக ஒரு ஏக்கருக்கு 8 முதல் 10 மெட்ரிக் டன் மகசூல் வரும் என கூறப்படுகிறது. தர்பூசணி டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விதைக்கப்படும். கோடைகாலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அறுவடைக்கு வரும். வெயில் காலங்களில் பொதுமக்களுக்கு அதிக அளவில் விற்பனையாகும்.
இதனிடையே கடந்த சில வாரங்களாகவே தர்பூசணி பழங்களில் கலப்படம் செய்யப்படுவதாக தகவல் பரவியது. தொடர்ந்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் தோட்டக்கலை இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகள் மாவட்ட அளவிலான தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு விளக்கம் அளித்து வருகிறார்கள்.
இந்த ஆய்வில் தர்பூசணி பழங்களின் நிறம் மற்றும் சுவைக்காக எவ்வித செயற்கை ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஆறுமுகம் கூறினார். இதுகுறித்து ஆறுமுகம் கூறுகையில், தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமுள்ளதால் கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்கும். உடலின் நீர்ச்சத்தின்மையை போக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ.சி.பி1. பி.6 போன்ற நுண்ணூட்ட சத்துக்களும், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன. இதில் குறைந்த அளவு சுக்ரோஸ் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் எவ்வித தயக்கமுமின்றி சாப்பிடலாம்.
தக்காளி, சிவப்பு கொய்யா, திராட்சை போன்ற பழங்களில் உள்ளது போல் தர்பூசணி பழத்திலும் இயற்கையாகவே லைகோபீன் எனப்படும் இயற்கை மூலப்பொருள் உள்ளதால் சிவப்பு நிறத்தில் தான் இருக்கும். இந்த லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டீன் நமது கண்பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது. கண்புரை நோயிலிருந்து பாதுகாக்கும்.
தர்பூசணி பழம் குறித்து தோட்டக்கலை துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இத்தகைய சத்துக்கள் நிறைந்த தர்பூசணியை கலப்படம் செய்யப்படுவதாக தவறான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த தர்பூசணிக்கு உரிய விலை கிடைக்கும். விவசாயிகள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களின் உடல் நலமும் பாதுகாக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications