ராமநாதபுரம் மாணவனின் வாழ்க்கையை காப்பாற்றிய.. பரமக்குடி பஸ் டிரைவர்! அசத்திய அரசு போக்குவரத்து கழகம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதவந்த மாணவன், அரசு பேருந்தில் ஹால் டிக்கெட் மறந்துவிட்டு சென்ற நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர் ஹால் டிக்கெட்டை பத்திரமாக கொண்டு வந்து ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அரசு பேருந்து சேவைகளில் ஆயிரம் குறைகள் இருக்கலாம். பஸ் டைமுக்கு வரல, ஸ்டாபிங்ல நிறுத்தல, நடத்துனர் பேசுறது சரியில்லை என.. புகார்கள் இருக்கலாம். ஆனால், அரசு பேருந்துகள் முழுக்க முழுக்க மக்களுக்காக மட்டுமே இயக்கப்படுகிறது. இதில் எந்த லாப நோக்கமும் கிடையாது.

அரசு போக்குவரத்து கழகம் மக்களுக்கான சேவையாற்றும் நிறுவனம் என்பது ஒவ்வொரு முறையும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதனை இன்று மீண்டும் ஒருமுறை அரசு பேருந்து ஓட்டுநர்கள் நிரூபித்திருக்கின்றனர்.
அதாவது இன்று காலை, ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுத மாணவர் ஒருவர் அரசு பேருந்தில் வந்திருக்கிறார். ஆனால், பேருந்தை விட்டு இறங்கி, எக்ஸாம் சென்டருக்கு வந்த பின்னர்தான் ஹால் டிக்கெட் பேருந்திலேயே மறந்து வைத்துவிட்டு வந்திருப்பதை உணர்ந்திருக்கிறார். நீட் தேர்வில் வெற்றி என்பது பல ஆண்டு கனவு. அந்த கனவு ஒரு சிறிய தவறால் மொத்தமாக அழிந்து போகும் சூழல் ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பாக எக்ஸாம் சென்டருக்கு வெளியே கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் விவரத்தை தெரிவித்து உதவி கேட்டிருக்கிறார் மாணவன். அவர்கள் உடனடியாக அரசு போக்குவரத்து கழகத்தை தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.
போனில் ஹால் டிக்கெட் மிஸ் ஆன விவரத்தை சொல்லி, பேருந்தின் பதிவெண்ணையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதனையடுத்து வேகமாக செயல்பட்ட அரசு போக்குவரத்து கழகம், சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தொடர்பு கொண்டு, ஹால் டிக்கெட்டை எதிரே வரும் பேருந்தில் மாற்றி கொடுக்க சொல்லியிருந்தது.
இதனையடுத்து, 30 கி.மீ. தொலைவில் உள்ள மானாமதுரையில் இருந்து பரமக்குடிக்கு வந்த வேறு ஒரு பேருந்து மூலம் ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டு பத்திரமாக மாணவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மாணவர் வெற்றிகரமாக தேர்வு எழுதியிருக்கிறார்.
அரசு போக்குவரத்துக் கழகமும், ஓட்டுநர்களும் நடத்துனர்களும் மக்களுக்காகவே சேவையாற்றுகிறார்கள் என்பதை இந்த சம்பவம் மேலும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது. மாணவருக்காக விரைந்து உதவி செய்த அதிகாரிகளுக்கும், ஓட்டுநர் மற்றும் நடத்துனரையும் பாராட்டலாமே!












Click it and Unblock the Notifications