ஐடி ரெய்டு.. விரைவில் திமுக அமைச்சர்கள் வீடுகளிலும்.. அதிர்ச்சி கொடுக்கும் பாஜக மாஜி அமைச்சர்!
ராமநாதபுரம்: திமுக அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை விரைவில் நடைபெற வாய்ப்புள்ளதாக பாஜக முன்னாள் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளரான வடவள்ளி சந்திரசேகர், விருதுநகரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் செய்யாதுரை ஆகியோர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதனால் அதிமுக நிர்வாகிகளை குறிவைத்து, வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது என்ற விமர்சனம் எழுந்தது.
அதேபோல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் இரண்டாவது இன்னிங்ஸை, அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மூலம் தொடங்கியுள்ளனர். இதனால் விரைவில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியின் மூலம் ஊராட்சி திட்டங்கள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் ஆய்வு செய்தார். அப்போது முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.

திமுக மீது விமர்சனம்
இதனைத்தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக ஆட்சியில் தமிழ்நாடு தற்போது போதைமயமாகிவிட்டது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. நாள்தோறும் கொலை, கொள்ளை என்று தமிழ்நாடு கொலை பூமியாக மாறிக்கொண்டுவருகிறது என்று விமர்சித்தார்.

தமிழகம் பிரிக்கப்படுமா?
தொடர்ந்து தமிழ்நாடு இரண்டாக பிரிக்கப்படும் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திர பேசிய கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழ்நாடு இரண்டாகப் பிரிக்கப்படும் என கற்பனைக்கு அப்பாற்பட்டதைப் பரப்பி வருகின்றனர். எந்த சூழலிலும் தமிழ்நாடு இரண்டாகப் பிரிக்கப்படாது. பிரிக்கக் கூடாது என்பதுதான் பாஜகவின் கொள்கை என்று கூறினார்.

அதிமுக கூட்டணி
பின்னர் அதிமுக விவகாரம் குறித்து பேசிய அவர், ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்ற நிலை அதிமுகவுக்கு வந்துவிடக் கூடாது. அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் நல்ல முடிவை எடுத்து, சரியான பாதையில் கட்சியை வழிநடத்த வேண்டும். அப்போது தான் அந்தக் கட்சியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். அதிமுக உட்கட்சி விவகாரங்களில் எங்களின் தலையீடு இருக்காது. அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக இடையிலான கூட்டணி தொடர்ந்து வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் எம்பி-க்களைப் பெறுவதுதான் எங்களின் இலக்கு என்று தெரிவித்தார்.

திமுக அமைச்சர்கள்
தொடர்ந்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் தொடர்ந்து நடந்துவரும் வருமான வரித்துறை சோதனை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அதிமுக நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதைப் போல், திமுக அமைச்சர்களின் வீடுகளிலும் விரைவில் வருமான வரி சோதனை நடைபெற அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications