குலுக்கலில் மிஸ்ஸான வாளி.. மன்சூர் அலிகானை போல் ஓ பன்னீர் செல்வத்துக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு..
ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓ பன்னீர் செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாளி சின்னத்தை ஓ பன்னீர் செல்வத்தை போல் 4 பேர் கேட்டு இருந்தனர். இதையடுத்து குலுக்கல் நடைமுறையில் வாளி சின்னம் ஓ பன்னீர் செல்வத்துக்கு கிடைக்கவில்லை.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் அவர் உள்ளார். பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி ஓ பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் போட்டியிடுவதாக அறிவித்தார். பாஜக கூட்டணி சார்பில் அந்த தொகுதியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் சுயேச்சையாக அவர் களமிறங்கி உள்ளார்.
இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்தை நாடினார். ஆனால் தேர்தல் ஆணையம் இரட்டை இலையை ஒதுக்க மறுத்துவிட்டது. இரட்டை இலை அதிமுகவின் சின்னமாக இருக்கும் நிலையில் அந்த கட்சியும் தேர்தலில் போட்டியிட உள்ளதால் இரட்டை இலை ஓ பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்படவில்லை.
மேலும் கட்சிக்குள் உள்ள பிரச்சனை மற்றும் வழக்குகளை சுட்டிக்காட்டி அவர் தரப்பில் இரட்டை இலையை முடக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையையும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. இதையடுத்து ராமநாதபுரத்தில் போட்டியிடும் தனக்கு வாளி, திராட்சை, பலாப்பழம் ஆகியவற்றில் ஒன்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் ஓ பன்னீர் செல்வம் கேட்டிருந்தார்.
இதில் ஓ பன்னீர் செல்வம் கேட்ட வாளி சின்னத்தை 4 பேர் கேட்டனர். இதனால் குலுக்கல் முறையில் வாளி சின்னம் ஒதுக்க ராமநாதபுரம் மாவட்ட கலெ க்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான விஷ்ணு சந்திரன் முடிவு செய்தார். இதையடுத்து வாளி சின்னம் கேட்ட 4 பேரின் பெயர்கள் சீட்டில் எழுதி குலுக்கப்பட்டது.
அதில் மதுரை திருமங்கலம் வாகை குளத்தை சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வத்துக்கு (ஓபிஎஸ்) பெயர் வந்தது. இதையடுத்து வாளி சின்னம் மதுரை வாகை குளத்தை சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டது. இரட்டை இலையை தொடர்ந்து வாளி சின்னமும் கைநழுவிய நிலையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகுதியில் ஓ பன்னீர் செல்வத்துக்கு போட்டியாக மேலும் 4 பன்னீர் செல்வம் போட்டியிடுகின்றனர். இதில் மதுரை வாகை குளத்தை சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வத்துக்கு வாளி சின்னம், மதுரை சோலை அழகுபுரத்தை சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர் செல்வத்துக்கு திராட்சை சின்னம், மதுரை மாவட்டம் ஒய்யாரம் மகன் பன்னீர் செல்வத்துக்கு கண்ணாடி டம்ளர், ராமநாதபுரம் மாவட்டம் மலையாண்டி மகன் பன்னீர் செல்வத்துக்கு பட்டாணி சின்னம் ஒதுக்கப்பட்டது.
முன்னதாக வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் சுயேச்சையாக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். அவருக்கு இன்று பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டது. அதேபோல் ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர் செல்வத்துக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications