பள்ளிக்கு முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரலாம். தடை இல்லை..ராமநாதபுர மாவட்ட கல்வி அலுவலர்
ராமநாதரம்: ராமநாதபுரத்தில் ஹிஜாப் அணிந்து வர கூடாது என பள்ளி தலைமை ஆசிரியர் பேசிய விவகாரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 'இஸ்லாம் சமூக மாணவிகள் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வரலாம் என்றும் அதற்கு எந்த தடையும் இல்லை' என்று தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஹிஜாப் அணிய தலைமை ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்தாக பரவிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிதாக பள்ளியில் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்று இருக்கிறார்.
3 லட்சத்தில் எப்படி தொழில் தொடங்க முடியும்..மோடியின் முத்ரா திட்டம் நடைமுறையில் பயனற்றது-ப சிதம்பரம்
சமூக வலைத்தளங்களில் வீடியோ
அப்போது அந்த மாணவியிடம் பள்ளி தலைமை ஆசிரியை ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியரும், மாணவியின் தாயாரும் பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து மாணவியின் தாய் தலைமை ஆசிரியரை சந்தித்து இது தொடர்பாக விளக்கம் கேட்டு இருக்கிறார்.
இதை மாற்ற முடியாது
இதற்கு பதிலளித்த தலைமை ஆசிரியை, "தனியார் பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதிப்பார்கள். இது அரசுப் பள்ளி. இந்த பிரச்சனைக்கு பிறகு ஹிஜாப் அணிய சொல்லி எந்த உத்தரவும் வரவே இல்லை. இது நான் கொண்டு வந்த பழக்கம் இல்லை. எனக்கு முன்பே இதுதான் நடைமுறை. என்னால் இதை மாற்ற முடியாது." என்றார். தொடர்ந்து மாணவியின் தாய் கூறுகையில், ''தமிழ்நாடு அரசு பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதை நிரூபித்தால் மாணவியை பள்ளிக்குள் அனுமதிப்பீர்களா?" என தலைமை ஆசிரியரிடம் கேட்கிறார்.
பேச்சுவார்த்தை
அதற்கு அவர், "நான் அட்மிஷன் போடும்போதே இதை சொல்லி யோசிக்க சொன்னேன். அட்மிஷன் போட்ட பிறகு இதை செய்ய முடியாது" என்றார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்துவின் அறிவுறுத்தலின் படி, மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தடை விதிக்க கூடாது
இதில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை பள்ளி மாணவிகளின் பெற்றோர், பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த ஜமாத்தார்கள் ஆகியோர் கூடினர். இந்த கூட்டத்தின் போது ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்கப்பட்டது. அப்போது ஜமாத் தரப்பில் இஸ்லாம் சமூக மாணவிகள் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து தான் வருவார்கள்.. அதற்கு தடை விதிக்க கூடாது என்று கூறப்பட்டது.
தடை இல்லை
தொடர்ந்து பேசிய மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள், இஸ்லாமிய சமூக மாணவிகள் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வரலாம் என்று கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரலாம்.. அதற்கு யாரும் தடை விதிக்க மாட்டார்கள்.. அதே நேரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மாணவியின் தாய் அவருக்கே தெரியாமல் வீடியோவாக எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டது தவறு... என்று கூறினார். இதனை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து கூறுகையில், 'அரசுப்பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்தும் வரலாம்.. அணியாமலும் வரலாம்.. அவர்களுக்கு எந்த தடையும் இல்லை..' என்றார்.