மூச்சுத்திணறல் ஏற்பட்ட பெண் கொரோனா நோயாளி.. பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஊராட்சி செயலாளர்
ராமநாதபுரம்: கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் அதிகமாகி உயிருக்கு போராடிய பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் ஊராட்சி செயலாளர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Recommended Video
இராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஒன்றியம் சக்கரக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புனிதா.
இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். புனிதாவுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் சளி இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்து 24ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹாஸ்பிட்டல் போய்.. சுடுகாட்டில் காத்திருந்தது போய்.. எரியூட்ட விறகுகளுக்காக காத்திருக்கும் சடலங்கள்
மருத்துவமனை
இந்த நிலையில் 25ஆம் தேதி புனிதாவின் வீட்டுக்குச் சென்ற மருத்துவர் குழு மற்றும் பஞ்சாயத்து செயலாளர் விமல் ஆகியோர் புனிதாவை பார்வையிட்டதில் அவருக்கு மூச்சு திணறல் அதிகமாகி மயங்கும் நிலையில் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை அருகில் உள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தனர்.
புனிதா
உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து சுமார் இரண்டு மணி நேரமாக வாகனம் வராததால் சற்றும் யோசிக்காத ஊராட்சி தலைவரின் மகன் கந்தகுமார் ஊராட்சி செயலர் விமலை அழைத்து புனிதாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லுமாறு கூறினார்.
மூச்சுத்திணறல்
இதையடுத்து விமலும் தனது உயிரை பணயம் வைத்து ராமநாதபுரம் மருத்துவமனைக்கு தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று சிகிச்சை அளித்து ஆபத்தான நிலையிருந்து காப்பாற்றப்பட்டார். கொரோனா பாதித்து , மூச்சு திணறல் அதிகமாகி ஆபத்தான நிலையில் இருந்தும் 108 ஆம்புலன்சுக்கு போன் பண்ணி ஆம்புலன்ஸ் வராத நிலையில் இரு சக்கர வாகனத்தில் இவர் அழைத்து சென்ற வீடியோ வைரலானது.
குவியும் பாராட்டு
இதையடுத்து ஊராட்சி செயலர் விமல், ஊராட்சி உதவி தலைவர் ஹரி, பஞ்சாயத்து தலைவரின் மகனான கந்தகுமார் ஆகியோரின் செயலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். அத்துடன் சமூகவலைதளங்களிலும் நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.