கிலோ வெண்டைக்காய் எப்படிப்பா.. பரமக்குடியை அதிர வைத்த குரல்!
பரமக்குடியில் வீதி வீதியாக சென்று கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
பரமக்குடி: "கிலோ வெண்டைக்காய் எப்படிப்பா?" என்ற குரலை கேட்டதும் வியாபாரிகள் ஆடிப் போய்விட்டார்கள். தரையில் உட்கார்ந்து விலை கேட்டது ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ்தான்!
கலெக்டர் வீரரராகவராவ் திடீரென்று பரமக்குடிக்கு இன்று வந்தார். அங்கு நகராட்சி பகுதிகளில் நிலவும் சுகாதார பாதுகாப்பு குறித்த ஆய்வினில் ஈடுபட்டார். பரமக்குடியில் ஒரு தெருவை விடவில்லை, ஒரு வீட்டை விடவில்லை.. எல்லோரிடமும் சென்று "கழிவுநீர் வசதி எப்படி இருக்கிறது? குப்பையெல்லாம் தினமும் வந்து எடுத்துட்டு போறாங்களா?" என்று விசாரித்தார்.
அதற்கு மக்கள், "இல்லை, யாருமே சரியா வருவது கிடையாது, குப்பை தினமும் வந்து எடுக்கறது இல்லை, கொசு தொல்லை அதிகமாக இருக்கு, குடிச்சிட்டு பாட்டிலை நடுரோட்டிலேயே போட்டுட்டு போறாங்க" என்று அடுக்கி கொண்டே போனார்கள். அனைத்தையும் சரி செய்கிறேன் என்று உறுதி தந்தார் கலெக்டர். பிறகு திடீரென்று ஒரு குச்சியை எடுத்து, அங்கிருந்த சாக்கடையில்அதை உள்ளே விட்டு ஆழம் பார்த்தார்.
சுகாதார வளாகம்
அருகில் இருந்த சுகாதார வளாகத்திற்கு சென்றார். உள்ளே நுழைந்ததும் குப்பையும், சரக்கு பாட்டில்களும், பான்பராக் பாக்கெட்டுகளும் சிதறி கிடைப்பதை கண்டு அதிர்ந்தார். பின்ன, சுகாதார வளாகத்தை பராமரிப்பு செய்து வரும் ரோஜா மகளிர் மன்றத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து அங்கேயே உத்தரவு பிறப்பித்தார்.
வெண்டைக்காய்
பிறகு சின்னக் கடை காய்கறி மார்க்கெட் பக்கம் கலெக்டர் சென்றார். அங்கே எலுமிச்சை வெண்டைக்காய் என விற்று கொண்டிருந்தனர். வியாபாரிகளுடன் கீழே உட்கார்ந்து கொண்ட கலெக்டர் "வியாபாரம் எல்லாம் எப்படி போகுது? வெண்டைக்காய் கிலோ எப்படி?:" என்று கேட்டறிந்தார்.
குப்பை கிட்டங்கி
கலெக்டர் இப்படி வீதி வீதியாக ஆய்வு நடத்துகிறார் என்று கேள்விப்பட்டதும், அந்த ஊர் முக்கிய பிரமுகர்களிலிருந்து ஆண்கள், பெண்கள் என கூட்டமாக வந்து விட்டனர். பிறகு நோய்கள் நிறைய பரவுவதால், குப்பை சேமிப்பு சுத்திகரிப்பு கிட்டங்கியை ஊருக்கு வெளியே அமைத்து கொடுத்தால் நல்லா இருக்கும் என்று எல்லோரும் கூட்டாக சொன்னார்கள். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தார்.
4 மணி நேரம்
பிறகு சிறுவர் பூங்காவிற்கு சென்ற கலெக்டர் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை உடனடியாக மாற்ற உத்தரவிட்டார். இப்படி கலெக்டர் பரமக்குடிக்கு திடீரென்று வந்ததும், தெரு தெருவாக ஆய்வு செய்ததையும் அறிந்து மக்கள் மகிழ்ச்சியுற்றனர். அதாவது கலெக்டர் அந்த பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 4 மணி நேரம் வீதி வீதியாக நடந்தே ஆய்வு செய்ததுதான் இன்றைக்கு பரமக்குடி ஹாட் டாப்பிக்!