ஆட்டோ-கார் கோர விபத்து.. பிறந்த குழந்தையோடு வீடு திரும்பிய தம்பதி உள்பட 4 பேர் பலி..பெரும் சோகம்
ராமநாதபுரத்தில் காதல் திருமணம் செய்த தம்பதிக்கு குழந்தை பிறந்த நிலையில் அவர்கள் ஆட்டோவில் வீடு திரும்பியபோது கார் மோதி பயங்கர விபத்து நடந்தது.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இன்று மதியம் ஆட்டோ-கார் ஆகியவை மோதியதில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் காதல் திருமணம் செய்த தம்பதி உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்த இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட காதல் தம்பதி ஆட்டோவில் வீடு திரும்பியபோது இந்த கோர விபத்து நிகழ்ந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நதிப்பாலம் பகுதியில் இன்று மதியம் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவும், காரும் திடீரென்று மோதிக்கொண்டன.
இதில் ஆட்டோ கவிழ்ந்தது. மேலும் அதில் பயணித்தவர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

5 பேர் படுகாயம்
ஆட்டோவில் பயணித்து காயமடைந்த 2 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தை ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் 5 பேருக்கும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையின்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த அடைக்கான் (வயது 28), தனது மனைவி சுமதி 25, இந்த தம்பதியின் பச்சிளம் குழந்தை, அவரது குடும்பத்தை சேர்ந்த காளியம்மாள் மற்றும் பரமக்குடி அருகே மருச்சுகட்டி வித்தானூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மலைராஜ் (51), ஆகியோர் படுகாயமடைந்தது தெரியவந்தது.

காதல் திருமண தம்பதி
மேலும் டீ மாஸ்டரான அடைக்கான் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை சிங்கி வலை குச்சியை சேர்ந்த சுமதி என்பதை காதல் திருமணம் செய்தார். கர்ப்பிணியாக இருந்த சுமதி ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நேற்று முன்தினம் அவருக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து இன்று அடைக்கான் தனது மனைவி, மகனுடன் மலைராஜ் ஆட்டோவில் ஊர் திரும்பி கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. ஆட்டோவில் காளியம்மாள் என்பவரும் பயணித்தார்.

மாலையில் 4 பேர் உயிரிழப்பு
இவர்கள் சென்ற ஆட்டோவும், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை சென்ற காரும் உச்சிப்புளி அருகே நதிப்பாலம் பகுதியில் மோதியது. இதில் ஆட்டோவில் சென்ற 5 பேரும் படுகாயமடைந்தனர். இதில் தற்போது 4 பேர் பலியாகி உள்ளனர். படுகாயமடைந்த சுமதி, மலைராஜ் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இறந்த நிலையில் சுமதியின் கணவர் அடைக்கான் மற்றும் பிறந்து 2 நாளே ஆன மகன் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் பலியாகினர். காளியம்மாள் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெரும் சோகம்
இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த கார் டிரைவர் விக்னேஷ் (34) என்பவரை உச்சிப்புளி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதிதாக பிறந்த குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் குழந்தையுடன் தம்பதி உள்பட 4 பேர் பலியான சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.











Click it and Unblock the Notifications