அரசு பஸ்ஸில் அதிரடி.. மகிழ்ச்சியில் துள்ளிய ராமநாதபுரம்.. விசிலடித்து பூரித்த வண்ணாங்குளம்.. ஹேப்பி
ராமநாதபுரம்: கமுதியிலிருந்து ராமநாதபுரத்திற்கு அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் நிறைய உள்ளன. கமுதி பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரத்திற்கு நேரடி பேருந்து சேவைகளும், மற்ற பேருந்துகளும் எளிதாக கிடைக்கும்போது, கமுதிக்கு செல்வதற்கே ஒரு கிராமத்திற்கு பஸ் வசதி இல்லையாம்.. இப்போதுதான் முதல் முதலாக பேருந்து வசதி இந்த கிராமத்திற்கு கிடைத்துள்ளது.. இதுகுறித்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகே உள்ளது வண்ணாங்குளம் என்ற கிராமம்.. கமுதி வட்டத்தை சேர்ந்த பகுதியாகவே இது கருதப்படுகிறது என்றாலும், இந்த வண்ணாங்குளம் கிராமத்துக்கென்று இதுவரை முறையான போக்குவரத்து வசதி இல்லை.. குறிப்பாக, பஸ் வசதி இல்லை.. அரசு பஸ், தனியார் பஸ் என எந்த பஸ்ஸூமே இல்லாததால், கிராம மக்கள் பெருத்த அவதியை எதிர்கொண்டு வந்தனர்.

ராஜ கண்ணப்பனிடம் கோரிக்கை
இதையடுத்து, தங்கள் ஊருக்கு பேருந்து வேண்டும் என்று, முதுகுளத்தூர் தொகுதி எம்எல்ஏவும், வனத்துறை மற்றும் கதர் வாரியத் துறை அமைச்சருமான ராஜகண்ணப்பனிடம், ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.. பேருந்து வசதி இருந்தால் தங்களால், கமுதி சென்று வர உதவியாக இருக்கும் என்றும் கேட்டுக் கொண்டனர்..
இதையடுத்து, கிராம மக்களுக்கு பேருந்து ஏற்பாடு செய்து தருவதாக ராஜ கண்ணப்பன் உறுதி தந்திருந்தார். அதன்படியே, தற்போது, கமுதிக்கு பஸ் வசதியை ஏற்பாடு செய்து தந்திருக்கிறார் முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜகண்ணப்பன்.. நேற்றைய தினம் காலை அந்த ஊருக்கு அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டது..
முதல் பஸ் சேவை
முதல் முதலாக பஸ் சேவை வந்துள்ளதால், கிராம மக்கள் அனைவருமே சேர்ந்து விசிலடித்தனர்.. கைத்தட்டினர்.. குலவை போட்டு தங்களது பஸ்ஸை ஆரவாரம் செய்து வரவேற்றனர். தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இதற்கு காரணம், சுதந்திரம் அடைந்ததிலிருந்தே இதுவரை இவர்களுக்கு பேருந்து வசதி இல்லையாம். தங்களது வண்ணாங்குளம் கிராமத்திலிருந்து 15 கி.மீ தூரம் பயணம் செய்துதான் கமுதிக்கே சென்று வர முடியுமாம்..
காட்டு கருவேலமரம்
அதுமட்டுமல்லாமல், இந்த கிராம மக்கள் பெரும்பாலும், விவசாயம் செய்து வருகிறார்கள்.. அதேபோல, காட்டுக் கருவேல மரம் மூலம் கரிமூட்ட தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களது தொழில் விஷயமாக செல்ல வேண்டுமானால்கூட, 3 கி.மீ தூரத்திலுள்ள வேப்பங்குளம் கிராமத்துக்கோ அல்லது 4 கி.மீ தூரத்திலுள்ள பம்மனேந்தல் கிராமத்துக்கோ நடந்து சென்று, அதற்கு பிறகுதான் அங்கிருந்த பஸ்களில் தாங்கள் செல்லுமிடத்துக்கு சென்றுவர முடியும்.
பூரித்த மக்கள்
உள்ளூருக்கு இப்படியென்றால், சாயல்குடி, அருப்புக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், பரமக்குடி செல்ல வேண்டுமானால் கமுதிக்கு சென்றுதான் பஸ் ஏற முடியும்.. இப்போது நேரடியாகவே வண்ணாங்குளத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தங்களால் செல்ல முடியும் என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள் ஊர் மக்கள்.. பஸ் கிளம்பும்போது, டிரைவருக்கும், கண்டக்டருக்கும் அணிவித்து வாழ்த்து சொன்ன தருணம் கிராமத்தில் நெகிழ்ச்சியை தந்துவிட்டது. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications