ராமநாதபுரம்: ஆன்லைன் ரம்மி கொடுக்கல் வாங்கல் தகராறில் கார் ஏற்றி ஒருவர் கொலை..11 பேர் பலத்த காயம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள அம்மன் கோவில் கிராமத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடியபோது இரு தரப்பினருக்கு இடையே பணம் கொடுப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் கார் ஏற்றி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோதலில் காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் கிராமத்தில் இரு தரப்பினர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பணம் கொடுப்பது தொடர்பாக இரு தரப்பு இளைஞர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின்போது பரமக்குடியை சேர்ந்த ராமநாதபிரபு என்பவர் மதுபோதையில் தனது காரை சாத்தையா என்பவர் மீது ஏற்றியதில் பலத்த காயமடைந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாத்தையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மோதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்த 8 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக ராமநாதபிரபு மற்றும் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலைச் சம்பவத்தால் அம்மன் கோவில் கிராமத்தில் பதற்றம் நிலவுவதால், அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications