நில அளவீடு.. ராமநாதபுரம் அருகே விஏஓ, கிராம உதவியாளரின் வாழ்க்கையை புரட்டி போட்ட விவசாயி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மங்கலக்குடி பிர்க்கா பனிச்சகுடி குரூப் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து நைனா முகமது என்பவர் பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் கிராம உதவியாளராக சித்ரா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்வதற்கு ரூ.2,500 லஞ்சம் வாங்க முயன்ற போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர், தாசில்தார், நகராட்சி அதிகாரி, மாநகராட்சி அதிகாரி, ஊராட்சி எழுத்தர், மின் வாரிய அதிகாரி, காவலர், சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், ஆர்டிஓ, சார்பதிவாளர், பத்திர எழுத்தர் என யார் லஞ்சம் கேட்டாலும், அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளிக்கலாம். டிஎஸ்பி தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பக்டர் என தனியாக காவல் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களிடம் லஞ்சம் கேட்டதற்காக ஆதாரங்களை கொடுத்தால், அவர்களை கையும் களவுமாக பிடிக்க நடவடிக்கை எடுப்பார்கள். அண்மை காலத்தில் அதிகமான அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கைதாகி வருகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்ததை பற்றி பார்ப்போம்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மங்கலக்குடி பிர்க்கா பனிச்சகுடி குரூப் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து 31 வயதாகும் நைனா முகமது பணியாற்றி வருகிறார். இங்கு கிராம உதவியாளராக சித்ரா என்பவர் பணியாற்றி வருகிறார்கள். இந்த ஊராட்சிக்கு உள்பட்ட பெருவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் அவருக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்வதற்கு விரும்பினார். இதற்காக கிராம நிர்வாக அலுவலர் நைனா முகமதுவை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் நிலத்தை அளப்பதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டாராம். அந்த விவசாயி கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என பேரம்பேசியதாக கூறப்படுகிறது,
அதன்படி ரூ.500 குறைத்து ரூ.3,500-ஐ தர வேண்டும் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில் அந்த விவசாயி முன் பணமாக ரூ.1000 கிராம நிர்வாக அலுவலர் நைனா முகமதுவிடம் கொடுத்திருக்கிறாராம். ஆனால் மேற்கொண்டு லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி, அவர்களை மாட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்தார். இதுகுறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் நடந்த சம்பவங்களை கூறி புகார் செய்தார்.
அவர்கள் கொடுத்த அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அந்த விவசாயி, கிராம நிர்வாக அலுவலர் நைனா முகமது மற்றும் கிராம உதவியாளர் சித்ரா ஆகியோரிடம் கொடுத்திருக்கிறார். அப்போது ஊராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், நைனா முகமது, சித்ரா ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் திருவாடனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications