கடலில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம்! ரூ.350 கோடி திட்ட மதிப்பில் தனுஷ்கோடியில் ஆராய்ச்சி மையம்!
ராமநாதபுரம்: கடலில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது பற்றி ஆராய ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் ரூ.350 கோடி திட்ட மதிப்பில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது.
காற்றாலை மின் உற்பத்தியில் ஏற்கனவே தமிழகம் முன்னணியில் உள்ள நிலையில் இப்போது முன்னெடுக்கப்படும் இந்த புதிய முயற்சி பற்றி மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுரையில் 5 கி.மீ. நடைப்போட்டி.. வெற்றிபெற்ற 66 வயது முதியவர்!
இதனிடையே தமிழகம் மற்றும் குஜராத்தில் கடலில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க சாதகமான சூழல் நிலவுவதாக தேசிய காற்று சக்தி நிறுவன இயக்குநர் பலராமன் கண்ணன் கூறியிருக்கிறார்.
காற்றாலை மின்சாரம்
தமிழகத்தில் கடலில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான ஆராய்ச்சி மையம் அமைக்க ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் 75 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது. அங்கு ஆராய்ச்சி மையத்தை நிறுவி, கடலில் தலா 8 மெகாவாட் திறனுடைய இரண்டு காற்றாலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி பரிசோதிக்கப்படவுள்ளன. இந்த புதிய முயற்சி வெற்றிபெற்றால் கடலில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசுடன்
இதனிடையே தனுஷ்கோடி கடலில் சோதனை முயற்சியாக பரிசோதிக்கப்படும் காற்றாலைகளில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை தமிழக அரசுக்கு விற்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தையும், ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, திருப்பூர், கோவை மாவட்டங்களில் நடைபெறும் காற்றாலை மின் உற்பத்தி மூலம் ஏற்கனவே தமிழகம் முன்னணியில் இருப்பது கவனிக்கத்தக்கது.
தேசிய காற்று சக்தி
இதனிடையே இது தொடர்பாக தேசிய காற்று சக்தி நிறுவன இயக்குநர் பலராமன் கண்ணன் கூறுகையில், ''தமிழகம் மற்றும் குஜராத்தில் கடலில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. இரண்டு மாநிலங்களிலும் உள்ள கடல்களில் 2030-ம் ஆண்டு இறுதிக்குள் 30 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.''
டெல்லியில் மாநாடு
காற்றாலை மின் உற்பத்தி தொடர்பாக வரும் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை டெல்லியில் விண்ட் எனர்ஜி மாநாடு ஒன்று நடைபெறவிருக்கிறது. இந்த மாநாடு மூலம் காற்றாலை மின் உற்பத்தி துறையில் உலக முதலீடை இந்தியா பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.