கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை வெறியாட்டம்- தமிழக மீனவர்கள் மீது சரமாரி கல்வீச்சு- 60 படகுகள் சேதம்
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை சரமாரியாக கல்வீசித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர்களின் 60க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன.
ராமேஸ்வரத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 556 படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர் மீனவர்கள். கச்சத்தீவு அருகே பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது 5 படகுகளில் அதிவேகமாக வந்தனர் இலங்கை கடற்படையினர். பின்னர் திடீரென படகுகளில் குவித்து வைத்திருந்த கற்களை எடுத்து சரமாரியாக தமிழக மீனவர்கள் மீது வீசித் தாக்குதல் நடத்தினர்.
இலங்கை கடற்படையினரின் வெறித்தனமான தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் படகுகளுக்குள் பதுங்கி கொண்டனர். ஆனால் இடைவிடாமல் கல்வீசித் தாக்குதல் நடத்தினர் இலங்கை கடற்படையினர். இத்தாக்குதலில் 60 மீன்பிடி படகுகள் சேதமடைந்தன. மீனவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் 25 மீன்பிடி வலைகளும் சேதப்படுத்தப்பட்டன.
இலங்கை கடற்படையினரின் இத்தாக்குதல் தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இலங்கை கடற்படை நடத்தும் இந்த அட்டூழியத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications