பரமக்குடியில் கோர்ட்டில் நீதிபதியை நோக்கி செருப்பு வீசிய பெண் எம்எல்ஏவின் சகோதரர்.. என்ன நடந்தது?
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொன்னையாபுரத்தைச் சேரந்த ரமேஷ் பாபு என்பவர் நேற்று மதியம் பரமக்குடியில் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அப்போது நீதிபதி வழக்குகளை விசாரணை நடத்தி கொண்டிருந்தார். வக்கீல்கள் அவர்கள் இடத்தில் அமர்ந்திருந்தனர். அங்கு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென ரமேஷ் பாபு தனது நெருப்பை கழற்றி நீதிபதியை நோக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
பொதுவாக திங்கள் முதல் வெள்ளி வரை தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும். ஒவ்வொரு வழக்கின் விசாரணையும், 15 நாட்கள் முதல் ஒரு மாதம் ஒரு வரை விசாரிக்கப்படும். வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைதாகி இருந்தால், போலீசாரால் ஆஜர்படுத்தப்படுவார்கள். அவர்கள் விசாரணை கைதி என்றால் , காவல் நீட்டிக்கப்படும். ஜாமீனில் வந்தவர்கள் என்றால், ஒவ்வொரு முறையும் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.

குறிப்பிட்ட நாளில் ஆஜராகும் போது, விசாரணை நடைபெற்று முடிந்த உடன், அடுத்த வாய்தா எப்போது என்று அவர்களுக்கு அறிவிக்கப்படும். குறுக்கு விசாரணை, சம்மன் அனுப்புவது, சாட்சிகள் ஆஜராகுவது போன்ற பணிகளை தாண்டி, தண்டனை விவரமும் ஒவ்வொரு வழக்கிலும் அறிவிக்கப்படும்.
வழக்கு விசாரணையின் போது வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள், வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் என பலரும் நீதிமன்றத்திற்கு வருவார்கள். நீதிமன்றங்களில் நடைபெறும் விசாரணையை வெளியில் இருந்து கவனிப்பார்கள். அப்படித்தான் நேற்று பரமக்குடி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. அப்போது என்ன நடந்தது என்று பார்ப்போம்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரம் பாரதியார் தெருவை சேர்ந்த 44 வயதாகும் ரமேஷ் பாபு என்பவர் நேற்று மதியம் 12 மணி அளவில் பரமக்குடி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அப்போது வழக்கு விசாரணை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் திடீரென ரமேஷ் பாபு, செருப்பை கழற்றி நீதிபதி பாண்டி மகாராஜாவை நோக்கி வீசியிருக்கிறார். ஆனால் அது வக்கீல்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் போய் விழுந்துவிட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அங்கிருந்த போலீசார், ரமேஷ் பாபுவை பிடித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்பு அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதாகவும் தெரியவந்தது. மனைவியும் குழந்தைகளும் இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.
கடந்த 5 மாதங்களாக மனநலன் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தாராம். ரமேஷ்பாபுவின் தந்தை இறந்து விட்ட நிலையில், அவரது தாய் பாா்வதி மஞ்சூா் கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் இருந்து வருகிறாா். தனியாக வசித்து வந்த ரமேஷ் பாபு, நேற்று கோர்ட்டில் புகுந்து செருப்பு வீசியுள்ளார். போலீசார் நேற்று விசாரித்த போது, ரமேஷ்பாபு, மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசியின் சகோதரர் என்றும் தகவல்கள் வெளியானது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications