தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன் தரும் தமிழக அரசு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கலெக்டர் தகவல்
ராமநாதபுரம்: பிளஸ்-2 தேர்ச்சி, பட்டம், பட்டயப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்த தொழில் தொடங்க ஆர்வமுள்ளோருக்கு தமிழக அரசு கடன் உதவி செய்கிறது. அதுவும் கணிசமான வட்டி மானியத்துடன் கடன் உதவி அளிக்கிறது. இந்த கடன் உதவி எப்படி இருக்கும் என்றால், கிட்டத்தட்ட வட்டி முழுக்க மானியம் என்கிற வகையில் கழிந்துவிடும். எனவே தொழில் செய்து முன்னேற விரும்புவோருக்கு இந்த கடன் பெரும் வரப்பிரசாதம் ஆகும்.
இதுபற்றி ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "படித்த, முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிளஸ்-2 தேர்ச்சி, பட்டம், பட்டயப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்த தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் தொடங்க குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை வங்கிக்கடன் பெற பரிந்துரைக்கப்படுகிறது. 21 வயது பூர்த்தியடைந்த, பொதுபிரிவினர் 45 வயதிற்கு மிகாமலும், சிறப்பு பிரிவினர் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 55 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
3 ஆண்டு தமிழ்நாட்டில் வசிப்பவராகவும், முதல் தலைமுறை தொழில்முனைவோராகவும் இருக்க வேண்டும். பொது பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் சொந்த முதலீடு 10 சதவீதமாகவும் மற்றும் சிறப்பு பிரிவினருக்கு 5 சதவீதமாகவும் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.75 லட்சம் மானியம், மாற்றுத்திறனாளிகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 10 சதவீதம் கூடுதல் மானியம், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். மேலும் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்" இவ்வாற ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications